வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலை கபாலீஸ்வரர் காட்சி - ஞானம் தரும் தரிசனம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் 5 நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் காட்சியளித்தார்.
சென்னை: திரு மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப்பெருவிழாவை முன்னிட்டு 5 நாளில் சிவபெருமானும் பார்வதியும் வெள்ளி ரிஷபத்தில் காட்சியளித்தனர். வெள்விடை காட்சியை தரிசித்தால் திரு ஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம்வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பதும் சர்வ நிச்சயம் என்ற நம்பிக்கையின் படி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தோடுடைய செவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்காடு டையசுட லைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்தபீடு டைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
மேற்கண்ட தேவார பாடலை பிரம்மபுரம் எனும் சீர்காழியில் அம்மையப்பனிடம் குளக்கரையில் ஞானப்பால் குடித்த திருஞானசம்மந்தர் பாடிய பதிகமாகும். இதில் பிரளையத்திற்க்குபின் படைப்புத்தொழிலை காக்க வேண்டி பிரம்மா ரிஷப வாகனத்தில் காட்சி தரும் சிவனிடம் வேண்டியதாக அமைந்த பாடலாகும்.
ரிஷப வாகனம் அல்லது விடை வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி ரிஷபம் என்பது சிவனின் வாகனம் ஆகும்.
ரிஷப அமைப்பு
ரிஷப வாகனமானது மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் தொன்மையைக் காக்க வெள்ளியாலும், தங்கத்தாலும், பித்தளையாலும் காப்புகள் செய்யப்பட்டு போடப்படுகின்றன. ரிஷப வாகனமானது நின்ற நிலையில் உள்ளது. ரிஷபத்தின் நாக்கு மேல்வாயை நக்கியவாறு உள்ளதாகவும் கழுத்தில் மணிகள் மாலைகளாக உள்ளது போல அழகுற வடிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மேல் உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகை அமைக்கப்படுகிறது.
தருமதேவதை
தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார். தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டதால் இதுதான் ரிஷப வாகனம் உணர்த்தும் தத்துவமாகும்.
பிரளைய காலத்தில் நான்கு வேதங்களும் சிவபெருமானோடு இருக்கவேண்டி ரிஷபமாக மாறி சிவபெருமானின் வாகனாமானது. எனவே ரிஷபம் என்பது வேத்தின் ஸ்வருபமாகும்.
ரிஷபத்திற்க்கும் ஜோதிடத்திற்கும் உள்ள சம்மந்தம்:
ரிஷபத்திற்க்கும் ஜோதிடத்ததிற்க்கும் உள்ள சம்மந்தம் 12 ராசிகளில் ஒன்றாக ரிஷபம் அமைந்ததிலிருந்தே அதன் சிறப்பு விளங்கும். ரிஷபராசியின் அதிபதி சுக்கிரன். மிருகங்களுக்கு காரகன் சுக்கிரன். படைப்புத்தொழிலுக்கு கருவடையும் தன்மைக்கு காரகன் சுக்கிரன். வாகன காரகன் சுக்கிரன். இப்படி சுக்கிரனின் பல காரகங்களை கொண்டிருந்தாலும் வேதங்களும் தர்ம தேவதையும் ரிஷபமாக சிவனிடம் ஐக்கியமானதால் குருவின் காரகங்களும் மேலோங்கி காணப்படுகிறது
குருவின் சிறப்பு
சனகாதி முனிவர்களுக்கருளிய ஆதி குருவாகிய தட்சினாமூர்த்தி வேதத்தையும் தருமத்தையும் ரக்ஷிப்பவர் ஆவார். அத்தகைய சிவபெருமானுக்கு வேதங்களும் தர்மதேவதையும் ரிஷபவாகனமாக அமைந்தது குருவின் சிறப்பை விளக்குகிறது. ஜோதிடத்தில் குருவை புத்திர காரகன் என்போம். ஆனால் அந்த புத்திர உற்பத்திக்கு தேவையான காமத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிலத்தின் அதிபதி சுக்கிரன். கருப்பையின் அதிபதி சுக்கிரன். ஆக குருவும் சுக்கிரனும் சேர்தால்தான் படைப்புத்தொழில் என்பதுதான் உண்மை.
ஜாதகத்தில் குரு சுக்கிர இணைவு
ஒருவர் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் சேர்ந்து நின்றுவிட்டால் அவரைபோல சிறந்தவர் யாருமில்லை. "ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும் பழமொழிக்கேற்ப்ப குருவும் சுக்கிரனும் வாரி வாரி வரங்கிவிடுவார்கள். என்ன. இந்த போட்டியில் சிறிது காலதாமதமாகிவிடும். ஆனாலும் நல்ல பலன்கள் கட்டாயம் கிடைத்துவிடும்.
ரிஷப வாகன காட்சி
திரு மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப்பெருவிழாவை முன்னிட்டு சிவபெருமானும் பார்வதியும் வெள்ளி ரிஷபத்தில் நேற்றிரவு 11மணியளவில் தரிசனம் அளித்தனர். வெள்ளிவிடை காட்சியை தரிசித்தால் திரு ஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம்வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பதும் நம்பிக்கை
அனைத்தையும் தரும்
குருவும் சுக்கிரனும் சேர்ந்த அமைப்பு என்பதனால் தானோ குரு நாளின் முடிவிலும் சுக்கிர நாளின் ஆரம்பத்திலும் இந்த ரிஷப வாகன சேவை அமைந்துள்ளது.
இந்த ரிஷப வாகன தரிசனம் என்னவெல்லாம் தரும்? என்பதை பார்க்கலாம்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
மேலும் வாகன யோகம் தரும். புத்திர சந்தானம் தரும். திருமண வாழ்வு தரும்.
இத்தனை வரம் தரும் ரிஷப வாகன காட்சியை ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தின் மூலம் நீங்களும் தரிசனம் செய்யுங்கள் வாசகர்களே!