குலசையில் காலில் விழுந்த கணவன்... பேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்
கணவன் விரும்பாத என் அழகுத் திரு மேனியை அழித்து பேயுருவம் தாருங்கள்!'' என்று ஈசனை வேண்டவே, புனிதவதியின் அழகு அழிந்து, பேயுருவம் கொண்டாள்! இது நிகழ்ந்தது குலசேகரபட்டினம் என்பது நிறைய பேருக்கு தெரியாது.
திருநெல்வேலி: தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவனைக் காண காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்திற்கு சென்ற போது பரமதத்தர் தனது இரண்டாவது மனைவியுடன் வந்து அவரது காலில் விழுந்தார். கணவன் காலில் விழுந்த பின்னர் இந்த உடல் எதற்கு என்று நினைத்து பேய்க்கோலம் பூண்டார். பேய்க்கோலம் தாங்கிய அம்மையார் அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார். தலையால் நடந்து கயிலாயம் சென்று இறைவனை தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். அந்த மாங்கனிகளை பலர் பிரசாதமாகவும் வாங்கி சாப்பிட்டனர். குலசேகரபட்டினம் தசரா திருவிழாவிற்கு சிறப்பு பெற்ற இடம். இந்த ஊரில் மாங்கனி திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. காரணம் இங்குதான் காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்ற தலம் இருக்கிறது.
காரைக்காலில் பரமதத்தரை திருமணம் செய்த புனிதவதி இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, மாம்பழம் வடிவில் விதி விளையாடியது. இல்லறம் நடத்த மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை என்பதை உணர்த்த இறைவன் திருவிளையாடல் நடத்தினார்.
நேற்றைய மழை சும்மா டிரைலர்தான் கண்ணா.. மெயின் பிக்சரே இனிதான்.. நார்வே வானிலை மையம்
மறுமணம் செய்த பரமதத்தர்
புனிதவதியாரை தெய்வீகப் பெண் என்பதை உணர்ந்த கணவன், உடனேயே இவரை விட்டு விலகி சென்று விடுகிறார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் குலசேகரபட்டினத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் பிறக்க புனிதவதி என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்.
தெய்வமாக வணங்கிய கணவன்
பரமதத்தர் குலசேகபட்டினத்தில் இருப்பது அறிந்த புனிதவதியின் காரைக்காலில் இருந்து ஓடோடு வந்தார். புனிதவதியை எதிர்கொண்டு அழைத்த பரமதத்தர், மனைவி-மகளுடன் புனிதவதியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உறவினர்கள் அதிர்ந்தனர். அவர்களிடம் புனிதவதி மனிதப் பிறவி அல்ல அவர் தெய்வப்பிறவி, நீங்களும் காலில் விழுந்து வணங்குங்கள் என்றார். அனைவரும் புனிதவதியாரின் காலில் விழுந்தனர்.
பேயுருவம் தந்த இறைவன்
காலில் கணவன் விழுந்த பின்னர் தனது நிலை உணர்ந்தார். கணவனுக்கு தேவையற்ற இந்த சதையும் அழகு, தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். பேயுருவம் பெற்ற காரைக்காலம்மையார் அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, கயிலை மலையான் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றார்.
தலையால் நடத்த அம்மை
பனிமலையில் இறைவன் வசிக்கும் கயிலையை காலால் மிதித்து கடக்க விரும்பாமல், தலையால் நடந்து செல்ல, அதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் 'வாரும் என் அம்மையே' என அழைத்தார். யாது வேண்டும் என்று சிவன் கேட்க அதற்கு அம்மையோ, 'பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னடியை மறவாமை வேண்டும். மகிழ்ந்து வாடி இன்னும் வேண்டும் நான் இறைவா! நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க வேண்டும்' என்று வேண்டினார்.
சிற்பத்தில் பேயுருவம்
அம்மையின் வேண்டுதலில் மகிழ்ந்த ஈசன், உடனே, திருவாலங்காட்டிற்குச் சென்று தனது ஊர்த்துவ தாண்டவமதைக் காணக் காத்திருக்கச் சொல்லி அருளினார். அதோடு, ஆலங்காட்டினை அவர் வந்தடைய, வழியும் காட்டி அருளியுள்ளார். அங்கு காரைக்காலம்மையார் ஈசனின் திருநடனத்தை காணும் பேற்றினைப் பெற அது முதற்கொண்டு, ஆடவல்லானின் சிற்பத் திருமேனியின், திருவடி கீழ் பேயாரும் இடம் பெற வைப்பது சிற்ப மரபாகியது.
மாங்கனி பிரசாதம்
இன்றைய தினம் காரைக்காலில் மட்டுமல்ல, குலசேகரபட்டினத்திலும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. அங்கு உள்ள காரைக்கால் அம்மையாருக்கு 2000 மாங்கனிகளை படையலிட்டு வணங்கி, தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. காரைக்கால் செல்ல இயலாதவர்கள் திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் காரைக்கால் அம்மையார் பேய் உருவம் பெற்ற தலம் சென்று தரிசனம் செய்யலாம். வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இல்லங்குடி என்பவர் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வருகிறார்.