காரைக்கால் மாங்கனி திருவிழா: நாளை மாப்பிள்ளை அழைப்பு - ஜூலை 16ல் மாங்கனி இறைத்தல்
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் நாளை தொடங்குகிறது. ஜூலை 16ஆம் தேதி செவ்வாய்கிழமை பரமசிவன் அடியார் கோலத்துடன் வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி
காரைக்கால் : பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் கோவிலில் நாளை சனிக்கிழமை மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. ஞாயிறன்று காலை 10 மணிக்கு பரமதத்தத்தர் புனிதவதியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 16ஆம் தேதி காலை 6 மணிக்கு பரமசிவன் பவளக்கால் விமானத்தில் வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வழிபடுவார்கள். அதே நாளில் அமுதுபடையலும் நடைபெறும்.
குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் மாங்கனி திருவிழாவில் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்யும் பக்தர்கள், இறைவன் மீது வீசப்படும் மாங்கனிகளை பிடித்து பிரசாதமாக சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பிள்ளை வரம் பெற்றவர்கள் மன மகிழ்ச்சியோடு தங்களின் வாரிசுடன் அடுத்த ஆண்டே காரைக்கால் வந்து இறைவனை தரிசனம் செய்து மாங்கனியை இறைத்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நாளை ஜூலை 13 முதல் 14, 15, 16, 17 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. மாங்கனித்திருவிழாவில் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்த இன்று முதலே பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் காரைக்காலுக்கு வருகை தர தொடங்கி விட்டனர்.
மாங்கனி திருவிழா வரலாறு
காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். இவரை நாகப்பட்டினத்தில் உள்ள வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார்.
மாங்கனி கொடுத்த கணவர்
ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை பெற்றுக்கொண்ட புனிதவதி தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பசியுடன் ஒரு சிவனடியார் வந்தார் சிவன். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார். அதற்கு சிவனடியார் ‘‘அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!'' என்றார்.
சிவனடியாருக்கு மாங்கனி
அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். இரண்டாவது மாங்கனி மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.
மாங்கனி கொடுத்த சிவன்
இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தர், அப்படியானால் சிவபெருமானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினார்.
தெய்வமான மனைவி
புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன்பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தார்.
குலசேகரப்பட்டினத்தில் அம்மையார்
இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.
தலையால் நடந்து சென்ற அம்மையார்
கணவனே தன்னை தெய்வம் என்று கூறி வணங்கியதால் இறைவனை வேண்டி பேய் உருவமாக மாறி காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார்.
அம்மையே என்றழைத்த இறைவன்
அப்போது இறைவன், அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்'' என்று கேட்டார்.
திருவாலங்காட்டில் தரிசனம்
உடனே சிவபெருமான், "அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்'' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம்.