பிள்ளை வரம் தரும் காரைக்கால் மாங்கனி திருவிழா: மாம்பழங்களை படைத்து பக்தர்கள் வழிபாடு
காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனித் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
காரைக்கால்: பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருவீதி உலா வரும் போது மாங்கனிகளை இறைத்து வழிபட்டனர்.
63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை மாற்றியது இரண்டு மாம்பழங்கள்தான். எனவேதான் இன்றைய மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் இரண்டு மாம்பழங்களை படைத்து வழிபட்டு ஒன்றை பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர்.
குலசையில் காலில் விழுந்த கணவன்... பேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்
இந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாங்கனி திருவிழா 13ஆம் தேதியன்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. ஆற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிறன்று காலை 11 மணிக்கு பரமதத்தருக்கும் ஸ்ரீபுனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடும், இரவு ஸ்ரீபுனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச்சிபிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். பரமசிவன் அடியார் கோலத்துடன் பவளக்கால் விமானத்தில் அமர்ந்து வீதியுலா நடைபெற்றது. காலை 7 மணிக்கு பரமசிவன், காரைக்கால் அம்மையிடம் மாங்கனி வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா சென்றார்.
அப்போது நகரெங்கும் கூடியிருக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெற்றனர். இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. எனவேதான் பக்தர்கள் வாரி இறைத்த மாங்கனிகளை பிடித்த வீட்டு எடுத்துச்சென்றனர். இன்று மாலையில், ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
காரைக்காலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.