ஆடி அமாவாசை- சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்- நாளை விடுமுறை
ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் மட்டுமன்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வருகின்றனர்.
தாமிரபரணி சலசலத்து ஓடும் கரையில் கம்பீரமாக அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். அகத்தியர் முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும்.
அகத்திய மாமுனிவர் தென்திசையில் பல தலங்களுக்கு சென்று விட்டு பொதிகை மலை திரும்பும் போதெல்லாம் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ள இடத்தில் தங்கி விட்டுத்தான் செல்வார்.
அகத்தியருக்கு காட்சி
ஒரு நாள் காலையில் தாமிரபரணியில் நீராடிய பின் அகத்தியர் அங்கேயே அமர்ந்து தியானமும் செய்தார். அப்போது அங்கு ஒரு ஜோதி தோன்றியது. அதைக்கண்டு அதிசயித்துப் போன அகத்தியர் தனது ஞான திருஷ்டியால் ஆராய்ந்தார். உலக மாதவராகிய பிரம்ம ராட்சஷி, பேச்சி முதலிய எல்லா மூர்த்திகளுடன் சாஸ்தாவானவர், அந்த இடத்தில் தோன்றி மகாலிங்கத்தினை பூஜை செய்து வழிபட்டனர். அந்த நாள் ஆடி அமாவாசை நாள். அந்த காட்சி கண்ட அகத்தியர் ஆனந்தமாக புஷ்பம் சொரிய அவர்களை தரிசித்து பிரார்த்தனை செய்தார்.
பாபங்கள் தீரும் பாண தீர்த்தம்
ஆடி அமாவாசை நாளில் பாண கட்டத்தில் யார் ஒருவர் ஸ்நானம் செய்து இங்குள்ள மூர்த்திகளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சுபோல நாசம் அடைந்துவிடும். புத்திர பாக்கியத்துடன் அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைத்து விடும் என்ற வரத்தை அகத்தியர் சாஸ்தாவிடம் பெற்றார். அச்சமயம் தேவர்கள் வான் முகட்டில் இருந்து மலர் மாரி பொழிய ஆரம்பித்தனர். பின்னர் அனைத்து தேவமூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட வழிவகுத்தார். அன்று முதல் சொரிமுத்து அய்யனார் என்ற பெயர் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. அந்நாள் முதல் இவ்விடம் பிரசித்திப் பெற்ற இடமாக மாறியது.
சொரிமுத்து அய்யனாருக்கு வழிபாடு
இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இங்கு நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இந்த திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
அய்யனாரே குலதெய்வம்
இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது. குல தெய்வம் தெரியாதவர்கள் சொரிமுத்து அய்யனாரை குலதெய்வமாக வழிபடலாம்.
பக்தர்கள் குவிந்தனர்
சொரிமுத்து அய்யனார் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா நாளை 11ஆம் தேதி சனிக்கிழமை நடக்கிறது. இதற்காக கடந்த 2ஆம்தேதி கால் நாட்டுதலுடன் விழா தொடங்கி, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோவில் அருகே குடில் அமைத்து, சமையல் செய்து தங்கியிருந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு
ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி பணி நாளாக அறிவித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.