கார்த்திகை அமாவாசை: முன்னோர்கள் அருளோடு அன்னை மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்
கார்த்திகை மாதம் செவ்வாய் கிழமை அமாவாசை வருவது சிறப்பு. இன்றைய தினம் முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வணங்க வேண்டும்.
சென்னை: கார்த்திகை மாத பவுர்ணமி எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ, அதே போல கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று கார்த்திகை மாத அமாவாசை தினமாகும். இன்று இரவு வரை அமாவாசை உள்ளதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடச் சிறந்த நாளாகும். கார்த்திகை பவுர்ணமி ஜோதி வடிவில் சிவன் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. அதே போல கார்த்திகை அமாவாசை நாளில்தான் அன்னை மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. இன்று முன்னோர்கள் வழிபாடு போல மகாலட்சுமியையும் வழிபட நன்மைகள் நடக்கும்.
கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம்.
கார்த்திகை அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும். இந்த நாளில் விரதமிருந்து அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை
2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் : கன்னி ராசிக்கு கவலைகள் தீரும்
புத்திர பாக்கியம்
கார்த்திகை மாதம் செவ்வாய் கிழமை அமாவாசை வருவது சிறப்பு. இன்றைய தினம் முன்னோர் வழிபாட்டுக்கு ஏற்ற நாள். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வணங்க வேண்டும். கந்த சஷ்டி விரதம் இருக்க தவறியவர்கள். நாளை பிரதமை தொடங்கி சஷ்டி வரை கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் புண்ணியம் கிடைக்கும் புத்திர பாக்கியத்தை வழங்குவார் முருகப்பெருமான்.
காங்கையில் நீராடிய புண்ணியம்
கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூரில் ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர். அங்கு செல்ல முடியாதவர்கள் அந்த மகானை நினைத்துக்கொண்டு நமது தலையில் தண்ணீர் விட்டு நீராடலாம். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் நீராடினால் அந்தணர்களால், குருவால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், பலவித பாவங்கள் மற்றும் மனச்சஞ்சலத்தால் ஏற்பட்ட பெண் பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
மகாலட்சுமியின் அருள்
கார்த்திகை அமாவாசை நாளில்தான் பாற்கடலில் இருந்து அன்னை மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. மகாலட்சுமி பொதுவாக அஷ்ட லட்சுமி வடிவத்தில் வணங்கப்படுகிறாள். நிம்மதியான சந்தோஷமான வாழ்வு அமைய இவர்கள் அருள் தேவை. மகாலட்சுமியே தன்னை அஷ்ட சக்திகளாகப் பிரித்துக் கொண்டு அருள் பாலிக்கிறாள். அஷ்ட லட்சுமிகள் 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி.
லட்சுமி பூஜை
நம் நாட்டின் வடக்குப் பகுதியில் தீபாவளியை ஒட்டி லட்சுமி பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. லட்சுமிக்கு அடுத்தபடி குபேரன் செல்வத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு யுகத்திலும் அன்னை மகாலட்சுமி அஷ்ட லட்சுமி உருவம் தாங்குகிறாள். எனவே யுகங்களுக்கேற்ப இந்த அஷ்ட லட்சுமிகளின் பெயர்கள் மாறும் எனப் புராணங்கள் கூறுகின்றன.
லட்சுமி வசிக்கும் இடம்
மகாலட்சுமியின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்போதும் உண்மையே பேச வேண்டும். வீட்டை சுத்தமாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்துக் கொள்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்கமுள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், புறம்பேசாதவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள் என இவர்களிடம் லட்சுமி நிரந்தரமாக வசிப்பாள் எனப் புராணங்கள் கூறுகின்றன. லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் இடங்கள் எல்லாம் அன்னை இருக்கும் இடங்கள்தான். எனவே நமது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் அழகாக வைத்திருந்தாலே அன்னை மகாலட்சுமியின் அருளோடு முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.