கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர்
சென்னை: கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.
பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.
பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது. சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது ஐதீகம்!
அதே நேரத்தில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில், சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகைத் தீப நாளில் "மாவளி" சுற்றுதல் என்ற விளையாட்டும் நிகழும். பாதாளத்தில் வசிக்கும் மாவலி, தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கிறார் என்கிற ஐதீகத்தால் அவர் பெயரால் இது "மாவலி" ஆனது என்றும் கூறுகின்றனர்.