சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை கார்த்திகை தீப திருநாளில் கொளுத்துவது ஏன் தெரியுமா
சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சிவன், முருகன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர். சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.
சென்னை: கார்த்திகை திருநாளில் சிவ ஆலயத்திலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை சொக்கப்பனை கொளுத்துவார்கள். சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது.
கார்த்திகை பவுர்ணமி தினமான இன்று தமிழகத்தில் திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் இன்று மாலை ருத்ர தீபம் ஏற்றப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் திருக்கார்த்திகை ருத்திர தீபம் இன்று மாலை 6.30 மணிக்குமேல் இரவு 7 மணிக்குள் ஏற்றப்படுகிறது. இதையொட்டி சுவாமி சந்நிதியில் நேற்று மாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சுவாமி சந்நிதி பாரதியார் தெரு செல்லும் வழியில் சொக்கப்பனை முக்கில், சுவாமி சொக்கப்பனை தீபம் இரவு 7 மணிக்குள் ஏற்றப்படுகிறது.
தேவ மரம் பனை
கற்பக தருவான பனை பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு.
முக்கி நிலை
பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.
அடிமுடி தெரியாத சிவன்
பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அமோக விளைச்சல் கிடைக்கும்
விஷ்ணு ஆலயங்களிலும் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் ரங்காநாதர் கோவிலில் இன்று இரவு சொக்கப்பனை ஏற்றப்படும். கோவில்களில் சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை காப்பாக நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். சாம்பலை எடுத்துச் சென்று வயல்வெளிகளில் தூவினால், அந்த முறை அமோக விளைச்சல் நிச்சயம் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை தீப திருவிழா
கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் திருவண்ணாமலையில் சிவமாக காட்சி தரும் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுவதால் சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.