கார்த்திகை தீப திருநாளில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுங்கள்...லட்சுமியின் அருள் கிடைக்கும்
வீடுகளை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொண்டு மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வணங்கினால் அந்த வீட்டில் லட்சுமி குடியேறுவாள்.
சென்னை: கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமையையும் விளக்கேற்றி வழிபடும் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். விளக்கு வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற வேண்டும்.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார்.
நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
அகல் விளக்கு தீபம்
திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
தீபம் ஏற்றும் மாதம்
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
நன்மை தரும் நேரம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும்.
தடைகள் நீங்கும்
மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
நன்மை தரும் விளக்கு
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.
எண்ணெயின் மகிமை
நெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் அதிகரிக்கும்.
பாவம் அதிகரிக்கும்
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும்.
விளக்கு தானாக அணையக்கூடாது
சிலர் விளக்கு ஏற்றியதுடன் நமது கடமை முடிந்தது என்று நினைக்கின்றனர். விளக்கு ஏற்றி மறந்து விட்டால் அது தானாக கருகி அணைந்து விடும். விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணையக்கூடாது. கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் குளிர்விக்க வேண்டும் அப்போதுதான் விளக்கு ஏற்றியதன் பலன் கிடைக்கும்.