திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
Recommended Video
திருவண்ணாமலை: அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா என எங்கும் முழக்கம் எதிரொலிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம் ஆட அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அப்போது எழுந்த அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது. கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் விளக்கேற்றி பக்தர்கள் கார்த்திகை தீப திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பஞ்சரத தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.
பரணி தீப தத்துவம்
தீப திருவிழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மலை மீது பக்தர்கள்
கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக பக்தர்கள் மற்றும் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் அடுத்தடுத்து மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன. மகா தீபத்தை காண 2,500 பேர் மட்டுமே மலை மீது ஏறிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரா
மாலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி அளித்தார். சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அந்த விளக்கு ஒளி தென்பட்ட அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டது எங்கும் எதிரொலித்தது. இதனையடுத்து வீடுகளிலும் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றினர்.
வீடுகளில் தீப ஒளி
கோவில்களில் மின் விளக்குகள் எரிய விடப்பட்டதை அடுத்து ஒளி வெள்ளம் பரவியது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன. திருக்கார்த்திகையின்போது குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்பதே இதன் ஐதீகம். வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பானது என்பதால் அனைவரும் தீபத்தை ஏற்றி வைத்திருந்தனர்.