கார்த்திகை தீபம்: ஶ்ரீரங்கத்தில் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு - ரங்கா முழக்கமிட்ட பக்தர்கள்
திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி : ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள் காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளினார். ரங்கா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீப திருவிழா சிவன், முருகன் ஆலயங்களில் மட்டுமல்லாது பெருமாள் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, நம்பெருமாள் கதிர் அலங்காரம் எனப்படும் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, கருடாழ்வார் மண்டபம் வந்தடைந்தார்.
அங்கிருந்து தீபமானது கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் 20 அடி உயரத்தில் பனை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம் வந்து, கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை ரங்கா, ரங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர் நம்பெருமாள் திருவந்திகாப்பு செய்யப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தையொட்டி, லட்ச தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி கோயில் வளாகத்தில் பத்தாயிரம் அகல் தீப விளக்குகளை மட்டும் வைத்து, சிறப்பு தீப வழிபாடு நடத்தப்பட்டது. இதற்காக மாலை 6 மணி அளவில் கோயிலில் மணி அடிக்க, பக்தர்களும், குழந்தைகளும் கார்த்திகை விளக்குகளில் தீபம் ஏற்றினர்.
சவுந்தர்ராஜ பெருமாள் சன்னதியில் இருந்து திருக்கோடி தீபத்துடன் எழுந்தருளி, ராஜகோபுரம் முன் வந்து தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியின் இறுதியில், கோயில் முன் அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.