திருக்கார்த்திகை திருவிழா : திருவண்ணாமலையில் பரணி தீபம் மாலையில் மகா தீபம் காண குவியும் பக்தர்கள்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காஞ்சி மாநகரத்தில் வாழ்ந்தால் முக்தி, காசியில் இறந்தால் தான் முக்தி, ஆனால் மலையே சிவமாக காட்சி தரும் திரு
திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் 10ஆம் தேதியான நாளை அதிகாலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கிரிவலப்பாதையில் வலம் வரும் பக்தர்கள் மலை உச்சியை நோக்கி வணங்குவார்கள்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காஞ்சி மாநகரத்தில் வாழ்ந்தால் முக்தி, காசியில் இறந்தால் தான் முக்தி, ஆனால் மலையே சிவமாக காட்சி தரும் திருவண்ணாமலையை நினைத்த மாத்திரத்திலேயே ஒருவருக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
கைலாயத்தில் சிவன் இருப்பதால் கைலாயத்திற்கு பெருமை. ஆனால் திருவண்ணாமலையில் லிங்கமே மலையாக உருவானதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இதனால் தான் இத்தலத்தை தென் கைலாய மலை என்று அழைக்கின்றனர்.
படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் நடுவில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அவர்களின் அகந்தையை போக்குவதற்காக எம்பெருமான் ஈசன், திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடிவருகிறோம்.
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்
நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும்
தழல் பிழம்பாய் தோன்றியத தெளிந்தார்
என்று நாயன்மார்களின் வரலாற்றை சொல்லும் பெரியபுராணத்தில் கார்த்திகை தீபத்திருநாளைப் பற்றி அற்புதமான பாடல் உண்டு. அதாவது, திருமாலும் பிரம்மாவும் அடிமுடி காண முடியாத வண்ணம் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த எம்பெருமான் ஈசனை அக்னி லிங்கமாக வழிபடுவதே இதன் அர்த்தமாகும். இதனை உணர்த்தவே கார்த்திகை தீபத்திருநாளில் சொக்கப்பனை கொளுத்துகின்றோம்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத்திருவிழாவின் உச்சகட்டமாக பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் வருகின்றனர்.
நாளை அதிகாலை 4.30 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர், சுவாமி சன்னதியில் இருந்து ஆடி அசைந்தபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் முடிந்த உடன், மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும்.
அதே நேரத்தில், அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள மலையில் சுமார் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான காத்திருக்கும் பக்தர்கள் மலையின் மீது ஏற்றப்பட்டுள்ள மீகா தீபத்தை வணங்குவார்கள். மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னர், நாளை இரவு தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடைபெறும். மகாதீபத்தை தொடர்ந்து அய்யங்குளத்தில் 4 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவதோடு கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடையும்.