கார்த்திகை மாதம் பிறந்தது - கந்த சஷ்டி முதல் திருக்கார்த்திகை வரை என்னென்ன விசேஷம்
கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விழா தொடங்கி திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரை பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
சென்னை: ஆன்மீக அலைகள் வீசும் கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் எந்த நாளில் என்ன பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.
கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி என்றும் பெயர் வைக்கலாம். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பலவிதமான பண்டிகைகள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன இவை வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை.
கார்த்திகை மாதத்தில் சோமவார விரதம் இருந்து சிவ ஆலயம் சென்று வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கார்த்திகை 1, 8,15,22,29 ஆகிய 5 நாட்களும் சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சிவ பெருமானை தரிசனம் செய்யலாம்.
கார்த்திகை மாதத்தில் 2ஆம் தேதி முடவன் முழுக்கு கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் ஒரு நாள் கூட காவேரியில் நீராட முடியாதவர்கள் இன்று அவசியம் காவிரியில் நீராட வேண்டும். இதனால் துலாஸ்நானம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.
கார்த்திகை 3ஆம் தேதி நாக சதுர்த்தி விநாயகரை வழிபட கடன் பிரச்சினை நீங்கும்
கந்த சஷ்டி : கார்த்திகை 5 வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
வாஸ்து நாள்: கார்த்திகை 08ம் தேதி நவம்பர் 23ஆம் நாள் திங்கட்கிழமை காலை 11-09 முதல் 11-45க்குள் வாஸ்து பூஜை செய்வது சிறப்பு. குடும்பத்தில் சுபிட்சம் அதிகரிக்கும்.
ஸ்ரீஅண்ணாமலை திருகார்த்திகை தீபம்: கார்த்திகை மாதம் 14ம் தேதி நவம்பர் 29ஆம் தேதி ஞாயிறு கிழமை திருக்கார்த்திகை தீப திருவிழா. திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபமும் மாலையில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இன்று கார்த்திகை விரதம். முருகனுக்கு விரதம் இருப்பது வாழ்க்கையில் வளம் அதிகரிக்கும்.
கால பைரவாஷ்டமி: கார்த்திகை 23 டிசம்பர் 8, 2020 காலபைரவாஷ்டமி இன்று விரதம் இருந்து கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
ரமா ஏகாதசி: கார்த்திகை மாதம் 26ம் தேதி டிசம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரமா ஏகாதசி ஆகும். 'ர' என்றால் நெருப்பு, 'மா' என்றால் தாய். அதாவது ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம் ஆரோக்கியம் மன நிம்மதி அதிகரிக்கும்.
குரு பெயர்ச்சி 2020: சிம்ம ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.
யமதீபம்: கார்த்திகை மாதம் 27ம் தேதி டிசம்பர் 12ஆம் தேதி சனிப்பிரதோஷம் யமதீபம். இன்று மாலை வீட்டிற்கு வெளியில் எமனுக்காக தெற்கு நோக்கி ஏற்றுவதினால் எம பயம் விலகும். வீட்டில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி குணமடைவார்கள்.
லட்சுமி ப்ரபோதன தினம்: கார்த்திகை மாதம் 29ஆம் தேதி டிசம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை லட்சுமி ப்ரபோதன தினம். இன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.