கார்த்திகை பிறந்தது - ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்
கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். குற்றால அருவிகளில் புனித நீராடிய பக்தர்கள்
மதுரை: கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடி அணிந்து செல்பவர்கள். இன்று கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆறுகள், அருவிகளில் நீராடிவிட்டு பல்வேறு கோவில்களில் குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.
குருசாமி தலைமையில் விரதம்
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயம், ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் முதலான ஆலயங்களில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வந்து மாலையணிந்து கொண்டார்கள். மேலும், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில், மதுரையில் உள்ள ஐயப்பன் ஆலயம் மற்றும் பல கோயில்களிலும் மாலையணிந்து கொண்டு விரதத்தைத் துவக்கினார்கள் பக்தர்கள்.
நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தரும் மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர்.
மாலை அணிந்த பக்தர்கள்
குற்றால அருவிகளில் அதிகாலையில் இருந்தே புனித நீராடிய பக்தர்கள் குருசாமி தலைமையில் மாலை அணிந்மு கொண்டனர். சிறுவர்களும் கன்னிசாமிகள் ஏராளமானோரும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். செண்பக விநாயகர் அம்பலவான விநாயகர் சாஸ்தா கோவில்களில் பூஜை செய்து மாலை அணிந்தும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
மண்டல பூஜை தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 41 விரதம் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 41 விரதத்தை தொடங்கியுள்ளனர். திருப்பூர், கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
பக்தர்கள் கூட்டம்
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட இந்த வருடம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் சபரிமலை சன்னதியின் பாரம்பரியத்தையும் புனிதத்தையும் காக்க 10 வயதிற்கு மேல் உள்ள பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று பெண் ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னதானம் வழங்கும் பக்தர்கள்
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டும் கேரள அரசை கண்டித்து சபரிமலை கோவிலில் உண்டியலில் காணிக்கை செலுத்தாமல் அதற்கு பதிலாக வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்போவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
துளசிமணி மாலைகள்
ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. சந்தன மாலை, ரத்த சந்தனமாலை, ஸ்படிக மாலை, ருத்திராட்ச மாலை, துளசி மாலை, செந்துளசி மாலை என 12 வகையான மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் ஐயப்ப சாமி டாலர்களும் விற்பனைக்கு வந்துள்ளன.
மேல்சாந்திகள் பதவியேற்பு
இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இரு மேல்சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி 18ஆம் படி வழியாக அழைத்து சென்றார். தொடர்ந்து புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொண்டனர்.
குவியும் பக்தர்கள்
தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். அடுத்த மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக பக்தர்களின் கூட்டம் குறைவாக இருந்தது.