சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காலம் தொடங்கியது - பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டனர். முதல் இரண்டு மணி நேரத்திலேயே 350க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கியுள்ளன. அதிகாலை முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டனர். கொரோனா காலமாக இருப்பதால் தினசரியும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதால் கூட்டமின்றி ஆலய வளாகமும், பம்பை நதிக்கரை பகுதிகளும் காணப்படுகின்றன.
Recommended Video
கார்த்திகை மாதம் தொடங்கி மகர ஜோதி தரிசனம் வரை சபரிமலை விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்த வருடமும் கன்னிசாமிகள் தொடங்கி குருசாமிகள் வரை ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதல் ஐயப்பனுக்கு மாலை அணியத் தொடங்கியுள்ளனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளிலிருந்தே ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது ஐயப்ப பக்தர்களின் வழக்கம். முதல்நாள் முதல் விரதம் அனுஷ்டிக்கத் துவங்கி, மண்டல பூஜை, மகரஜோதி தரிசனத்திற்கு சபரிமலை செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தினசரியும் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
சபரிமலை யாத்திரை
சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக தவக்கோலத்தில் கோயில் கொண்டுள்ள சுவாமி ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தீய சிந்தனைகளை கைவிட்டு, தூய பிரம்மச்சர்யம் கடைப்பிடித்து, புகை, மது, மாமிசம் தவிர்த்து, உடல், மன சுத்தத்துடன் ஒரு மண்டலம் வரை பக்தர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
சபரிமலை கோவில் திறப்பு
கார்த்திகை மாதம் மண்டல காலத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நடைதிறந்த பின் 7 மணியளவில் புதிய மேல்சாந்திகள் ஜெயராஜ் போத்தி மற்றும் ரெஜிகுமார் ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
மண்டல பூஜை ஆரம்பம்
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான இன்று முதல் சபரிமலையில் பிரசித்திபெற்ற மண்டல கால பூஜைகள் தொடங்கின. இன்று அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் புதிய மேல்சாந்தியான ஜெயராஜ் போத்தியும் மாளிகைப்புறத்தில் புதிய மேல்சாந்தி ரெஜிகுமாரும் கோவில் நடையை திறந்து மண்டல கால பூஜைகளை தொடங்கி வைத்தனர்.
1000 பக்தர்கள் தரிசனம்
கொரோனா பரவலை தொடர்ந்து மண்டல காலத்தில் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பக்தர்களையும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் நேற்று இரவு முதலே சபரிமலைக்கு வரத் தொடங்கினர். நிலக்கல் பகுதியில் பக்தர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடைபெற்றது. 24 மணிநேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருந்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
நிபந்தனைகளுடன் தரிசனம்
இன்று அதிகாலை 3 மணிக்கு பின்னர் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட போது பக்தர்கள் ஐயப்பனை தரிசித்தனர். கொரோனா நிபந்தனைகளின் படியே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இரண்டு அடி இடைவெளி விட்டு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். முதல் இரண்டு மணி நேரத்தில் 350 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர்.
கூட்டமில்லாத கோவில் வளாகம்
வழக்கமாக மண்டலபூஜை, மகரஜோதி தரிசனம் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு தினசரியும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் நிதானமாகவும் பொறுமையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.