கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்
கார்த்திகை மாதம் விருச்சிக மாதம். சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.
சென்னை: கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. இந்த கார்த்திகை மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். ஜோதி வழிபாட்டின் பெருமையை விளக்கும் கார்த்திகை மாதத்தில், மாதம் 30 நாட்களும் தீபதானம் செய்வது சிறப்பு. செல்வ வசதி உள்ளவர்கள், கோயில்கள், திருமடங்கள், வீடு, நான்கு தெருக்கள் கூடும் இடங்கள் மற்றும் வீதிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கலாம். முடியாதவர்கள் கார்த்திகை மாத பௌர்ணமி தொடங்கி முன்று நாட்களாவது, தங்கள் வீட்டில் வரிசையாகத் தீபமேற்ற வேண்டும்.
கார்த்திகை மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் விருச்சிகத்தில் சூரியன், சுக்கிரன், தனுசு ராசியில் சனி, கேது, குரு, துலாம் ராசியில் புதன், செவ்வாய் மிதுனத்தில் ராகு என கிரகங்கள் உள்ளன. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் கார்த்திகை 4ல் புதன் வக்ர முடிவு. கார்த்திகை 5 சுக்கிரன் தனுசு ராசிக்கு நகர்கிறார் 29ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். கார்த்திகை 19 புதன் விருச்சிக ராசிக்கு நகர்கிறார். ஆன்மிக அதிர்வலைகளால் நம் அகத்தினில் உள்ள அழுக்கினை அகற்றி நெஞ்சத்திற்கு நெகிழ்ச்சியைத் தரும் இந்த கார்த்திகை மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
சிம்மம்
சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... கார்த்திகை மாதம் உங்களுக்கு யோகமான மாதம். அதிர்ஷ்டங்கள் தேடி வரும் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருந்த இடைஞ்சல்கள் தீரும். கல்விக்கடன் கிடைக்கும். பிடித்த படிப்பு படிக்க நல்ல நேரம் கூடி வருது. உங்க ராசி அதிபதி சூரியன் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். புதன் கூடவே சஞ்சரிப்பார் இதனால் நன்மைகள் தேடி வரும். குரு அற்புதமான இடத்தில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும் சுப செலவுகள் செய்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கார்த்திகையில் கெட்டிமேளம் சத்தம் கேட்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு கடன் உதவி கிடைக்கும், தொழிலில் பணம் முதலீடு செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்க முயற்சி செய்ய வேண்டாம். இப்போது கால சர்ப்ப தோஷத்தின் பிடியில் கிரகங்கள் சிக்கியுள்ளன என்றாலும் தொழில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடி வரும். காதல் கை கூடி வரும் காலம் வரப்போகிறது. சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வரலாம் கவனமாக இருங்க. தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது. புத்திர தோஷத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கன்னி
புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே படாத பாடு பட்டு வருகிறீர்கள். கஷ்டங்களுடனே வாழ்ந்து வருகிறீர்கள். இனி கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் முயற்சி ஸ்தானத்தில் இருக்கிறார். சுக ஸ்தானத்தில் குரு ஆட்சி பெற்று அமர்கிறார். சுப காரியங்கள் நடைபெறும். திருமண தடைகள் நீங்கும். முயற்சி திருவினையாக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்கள் நன்றாக படிங்க வெற்றிகள் தேடி வரும். குரு சனி கேது உடன் சேர்ந்திருப்பதால் இதுநாள்வரை இருந்த தடைகள் நீங்கும். புதிய வேலைகள் கிடைக்கும். அரசு தேர்வு எழுதுங்க நல்லதே நடக்கும். கடன்கள் அடைக்கும் அளவிற்கு பணம் தேடி வரும். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க அது திரும்ப வராது பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. யாரையும் நம்பி முதலீடு செய்யாதீங்க. பிற மொழிகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுங்க அது உங்க வேலைக்கு நல்லது. இந்த மாதம் விளக்கேற்றி வழிபடுங்க தீவினைகள் தீரும்.
துலாம்
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த கார்த்திகை மாதம் சுமாரான மாதம். இதுநாள்வரை உங்க ராசியில் நீசம் பெற்றிருந்த சூரியன்,கார்த்திகை மாதத்தில் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சனி, குரு, கேது என மூன்றாம் வீட்டில் முக்கிய கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளன. கஷ்டங்கள் விலகும் காலம் வந்து விட்டது. திருமணத்திற்கு வரன் பாருங்க. இன்னும் சில மாதங்களில் கை கூடி வரும். கால சர்ப்ப தோஷத்தில கிரகங்கள் இப்போது சிக்கியுள்ளன. துலாம் ராசிக்கு இப்போது ராஜயோக காலம் வந்து விட்டது. குழந்தைகளுக்காக காத்திருக்கும் தம்பதியருக்கு புத்திரபாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரப்போகிறது. கடன் வாங்க வேண்டாம். கடனை அடைக்க புதிய கடனை வாங்காதீங்க. முயற்சி செய்தாலும் கிடைக்காது. கடனில் சிக்கி தத்தளிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் லாபம் வரும் அதுதான் இந்த மாதத்தில் உங்களுக்கு ஆறுதலான விசயம். செவ்வாய் உங்க ராசியில் அமர்கிறார். கோபமாக பேச வேண்டாம் நஷ்டம்தான் ஏற்படும். இந்த மாதம் நீங்க பத்ரகாளியை வணங்க பாதிப்புகள் நீங்கும்.
விருச்சிகம்
சூரியன் ஜென்ம ராசியில் இருக்கிறார். புதன் உங்க ராசிக்கு வரப்போகிறார். உங்க ராசிநாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குரு, சனி கேது இரண்டாம் வீட்டில் இருக்க சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இந்த கிரகங்களுடன் கூட்டணி சேர்கிறார். மாத இறுதியில் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார் சுக்கிரன். இடியே விழுந்தாலும் கண்டுக்காதீங்க. எதிலையாவது தலையிட்டு பிரச்சினையை இழுத்து விட்டுக்கொள்ள வேண்டாம். சனி நாக்கில் இருப்பதால் கவனமாக இருங்க. குருவினால் ராஜயோகம் வரும். பயணங்கள் சந்தோஷத்தை தரும். வேலையில் உற்சாகம் ஏற்படும். பதவி உயர்வு வருமான உயர்வு ஏற்படும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். லாபமாக முடியும். மாணவர்களுக்கு உற்சாகம் அதிகமாகும் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு வரக்கூடிய யோகங்களை சந்தோஷமாக அனுபவியுங்கள். குரு ராகு பார்வை வெளிநாடு வேலை வாய்ப்பிற்கு யோகம் உண்டு. சில சிக்கல்கள் இருப்பதால் கவனமாக இருங்க. சில மாதங்கள் காத்திருங்க. அரசு தொடர்பான வேலைகள் கிடைக்கும். அரசு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திடீர் திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். உங்க குடும்பத்தில் கவனமாக இருங்க. உடல் நலத்தில் அக்கறை காட்டுங்க. உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைய நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கவும்.