திருப்பதியில் கார்த்திகை பவுர்ணமி கோலாகலம் - தங்கக்கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசாமி
கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்தார் ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களுக்கு வலம் வந்த மலையப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை: கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி தங்கக் கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். பிரம்மோற்சவ காலங்களில் கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.
கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். கருடனை வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார் பெருமாள். எனவேதான் பெருமாள் கோவில்களில் கருட கொடி ஏற்றப்படுகிறது.
திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் கருடவாகனத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார் மலையப்பசாமி.
திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக எழுந்தருளிய அண்ணாமலையாருக்கு தெப்பல் உற்சவம்
கார்த்திகை மாத பவுர்ணமியான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணியளவில் கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து நான்கு மாடவீதிகளில் உலா வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக பிரம்மோற்சவ காலத்தில் கூட மலையப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் போனது. கடந்த 7 மாதமாக பவுர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏழுமலையானை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.