திருவண்ணாமலை கிரிவலம் வரப்போறீங்களா? உங்கள் மீதும் அமுத துளி விழ வாய்ப்பு இருக்கு
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். டிசம்பர் மாதம் கார்த்திகை மாத பவுர்ணமி 11ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு தொடங்கி
திருவண்ணாமலை: கார்த்திகை மாத பவுர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 11ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு தொடங்கி, மறுநாள் 12ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11.39 மணி பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும். திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணத்தில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது.
பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறியுள்ளனர்.
கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும்.
வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை தீப திருவிழா
பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அண்ணாமலையார் கோயில், மூலவர் சந்நிதி, உண்ணா முலை அம்மன் சந்நிதி மற்றும் தீப தரிசன மண்டபம் உட்பட அனைத்து இடங்களும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மலர் மாலைகளை கொண்டு தோரணங் களும் கட்டப்பட்டுள்ளன. இதேபோல், கோயில் சுற்றுச் சுவர் மற்றும் 9 கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
பவுர்ணமி கிரிவலம்
கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் எப்போது கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிர்வாகம் அறிவித்தது.
திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணத்தில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது.
கிரிவலம் புராண கதை
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
கிரிவல மகிமை
அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது.
பூமியில் நடக்கும் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அக்கினி மலையிலானது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட பூமாதேவியை குளிர்விக்க சாந்தப்படுத்த இப்படிப்பட்ட அமுத புஷ்ப மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது.
ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் ஒரேயொரு அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். பூமி குளிரும் .விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.
மகாவிஷ்ணு அவதாரம்
லீலாவதி கிரிவலம் வரும் போது மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அவள் வாயில் பட்டது. அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
நரசிம்மரின் சக்தி
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது. மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி. இனி கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், முடிந்தவர்கள் மழைக்கு ஒதுங்கவேண்டாம். நனைந்து கொண்டே கிரிவலம் வாங்க அமுத துளி உங்கள் மீதும் விழ வாய்ப்பு உள்ளது.
கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம்
திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர். கார்த்திகை பவுர்ணமி நாளை 11ஆம் தேதி புதன்கிழமை முற்பகல் 11.40 மணிக்கு தொடங்கி, மறுநாள் 12ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11.39 மணிக்கு நிறைவு பெறுகிறது. அப்போது, பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவலப் பாதையை சுற்றிலும் 275 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. கூட்டநெரிசலால் காணாமல் போகும் சிறுவர்களை பேஸ் டேகர் கருவி மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.