கார்த்திகை சோமவார பிரதோஷம் - நந்தி கொம்புகளுக்கு இடையே நடனமாடும் சிவ தரிசனம் பார்க்கலாம்
கார்த்திகை சோம வாரம் சிறப்பான நாள். அதிலும் இன்று பிரதோஷ தினம் என்பதால் கார்த்திகை சோமவார பிரதோஷம் அதி அற்புதமான நாளாக அமைந்துள்ளது. இன்று சிவ பெருமான் ஆடும் தாண்டவத்தை நந்தியின் கொம்புகளுக்கு இடையே
சென்னை: சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார் நாம் தொட்டதெல்லாம் துலங்கும். கார்த்திகை சோமவார பிரதோஷ தினமான இன்று நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும் நன்மையெல்லாம் பெருகும்.
பொதுவாகவே பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.
14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள். தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.
பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
பிரதோஷ தினமான இன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேதனம் செய்யலாம். ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.