கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் : எத்தனை விளக்கு ஏற்றுவது எங்கெல்லாம் தீபம் ஏற்ற வேண்டும்
27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நமது வீட்டில் இன்று 27 தீபங்களை ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். 27 தீபங்கள் ஏற்ற முடியாதவர்கள் ஒற்றைப்படையில் விளக்குகளை ஏற்ற வேண்டும்.
சென்னை: கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் நமது வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 27 விளக்குகள் 27 நட்சத்திரங்களை குறிக்கும். 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள் குறைந்தது ஒன்பது தீபங்களை ஏற்றலாம். இன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு மேல் தீபம் ஏற்ற நல்ல நேரமாகும். திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றலாம்.
அகல் விளக்குகளை மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொண்டு பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தி நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் தவிர வேறு எண்ணெய்களை உபயோகப்படுத்த வேண்டாம்.
பெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் ஒளிரும் ஜோதியில் இருந்து ஏற்றி வர வேண்டும். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம்.
கார்த்திகை தீபம் தினத்தன்று ஏற்றக்கூடிய அகல் விளக்குகள் எல்லாமே புத்தம் புதியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த ஆண்டு தீப திருநாளில் வீட்டில் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்து ஏற்றலாம். தலைவாசலில் ஏற்றக்கூடிய இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருப்பது மிகவும் நல்லது. விரிசல் இல்லாமல், உடையாத நல்ல அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவது முறையாகும்.
இன்றைய தினம் நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை ஏற்றுங்கள். வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமையலறையிலும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.
சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை. இன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நம் இல்லங்களில் மட்டுமல்ல உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள்.