அரசாளும் வரம் வேண்டுமா? கார்த்திகை தீப திருநாளில் விரதமிருந்து விளக்கேற்றுங்கள்
அக்னி அம்சம் நிறைந்த கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி நாளில் விளக்கேற்றி வழிபட நவகிரகங்களின் நல் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை: கார்த்திகை மாதம் சூரியன் செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்குள் சஞ்சரிக்கிறார். கார்த்திகை நட்சத்திர அதிபதி அக்னி பகவான். கார்த்திகை நட்சத்திர நாளில் சந்திரன் ரிஷபம் ராசியில் முழுமதியாக உச்சம் பெற்று சஞ்சரிப்பார். ரிஷபம் துலாம் வீடு. எனவேதான் கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் விளக்கேற்றி வழிபட எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றி வழிபட்டு பலனடைந்தவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் அக்னி பகவான். சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வை துளிகளை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர். எனவேதான் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் சிறப்பானதாக கொண்டாடப்பபடுகிறது.
முதல் தீபம்
முதல்நாள் பரணி தீபம் எனப்படும். பரணி காளிக்கு உரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள்.
திருக்கார்த்திகை தீபம்
கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை, திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.
பெருமாள் தீபம்
3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை விஷ்ணு தீபம் என அழைப்பர். இது, விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.
குலதெய்வத்தின் அருள்
4வது நாள் மிருகசீரிட நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது நாட்டுக் கார்த்திகையாகும். பெண்ணையும் மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வந்து சிறப்புகள் செய்து விருந்து வைப்பர். இந்நாளில் குலதெய்வங்கள் வீட்டுக்கு வந்து அருள்புரிவதாக நம்பிக்கை.
5ம் நாள் திருவாதிரை தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது, தோட்டக் கார்த்திகையாகும். வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகளில் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். இது, கிராமங்களில் உள்ள பலவகை தெய்வங்களுக்கான வழிபாடாகும்
சாகா வரம் பெற்ற அசுரன்
முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். `திரிபுராசுரர்' என்று அழைக்கப்படும் இந்த மூவரும் பிரம்மனை நோக்கித் தவம்புரிந்தனர். பிரம்மனிடம் சாகா வரம் தரும்படி வேண்டினர்.
பிரம்மன் கொடுத்த வரம்
சிவபெருமானைத் தவிர அனைவரும் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். எனவே, சாகா வரம் கிடைக்காது என்றார் பிரம்மா. `அப்படியானால் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று நகரங்களும், அவை நாங்கள் விரும்பியபடி பறக்கவும், வேண்டிய இடத்தில் இறக்கவும் வேண்டும், சிவபெருமான் நேரில் வந்து அழித்தாலொழிய, வேறு எவராலும் அழியக் கூடாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றனர்.
சிவனின் கோபம்
முப்புரங்களைப் பெற்றதால், அவர்களின் கர்வம் தலைக்கேறியது. அசுரர்கள் பலத்தோடு அனைத்தையும் அழித்தனர். அச்சமடைந்த மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான் பூமியை ரதமாகவும், சந்திரனை தேர்ச் சக்கரமாகவும், நான்மறைகளைக் குதிரைகளாகவும், மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார்.
அசுரர்கள் சாம்பல்
திரிபுரத்தை நோக்கி, தம் வில்லை வளைத்து நாணை ஏற்றினார். ஆனால், கணையைத் தொடுக்காமல், பார்த்துவிட்டு புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்த மாத்திரத்தில், முப்புரங்கள் தழலென எரிந்து சாம்பலாயின. அத்தனை அரக்கர்களும் கார்த்திகைப் பெளர்ணமி அன்று மடிந்தனர். இதனையறிந்த தேவர்களும் மக்களும் மகிழ்ந்தனர். அந்த நாளே திருகார்த்திகை தீப நாளாகும்.
பேரரசன் ஆன திரிசங்கு
ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள் என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான் என புராண கதைகள் கூறுகின்றன.