விரிஞ்சிபுரம் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழா: சிம்மக்குளம் தீர்த்தங்களில் நீராடத் தடை
கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு 11ஆம் தேதி நள்ளிரவு சிம்மக்குளம் திறக்கப்படுகிறது.
வேலூர்: விரிஞ்சிபுரம் கார்த்திகை கடை ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு 11ஆம் தேதி இரவு சிம்ம குளம் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று நோய் பரவல் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2 நாட்கள் திருவிழாவில் பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய இணையவழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சிம்மக்குளம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்திமிக்க மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. புகழ்மிக்க இக்கோயிலின் மதில் சிறப்புடையதாகவும் போற்றப்படுகிறது. தஞ்சைக் கோயிலின் அழகு, திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்று சொல்வார்கள். இந்த கோயிலில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விசேஷமானது.
கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு திருமண வரம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆண்டு 12 ஆம் தேதி கார்த்திகை கடைஞாயிறு விழா கடைபிடிக்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 11ஆம் தேதி முதல் சிம்மக்குளம் உள்ளிட்ட நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2 நாட்கள் திருவிழாவில் பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய இணையவழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பொது தரிசனம் செய்ய விருப்பமுள்ளவர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3000 பக்தர்கள் 6.30 முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வயதானவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தாதவர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்துவர அனுமதி இல்லை. கோவிலில் தீர்த்தம், விபூதி மற்றும் குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படமாட்டாது.
என்னாச்சு விழுந்து உடைஞ்சிருச்சா...எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் விபத்து காட்சிகள் சிக்கியது
இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நோய் பரவல் தொற்று தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.