கார்த்திகை சோமவாரம் விரதம் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்
கார்த்திகை சோமவாரம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. குற்றாலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் அருவிகளில் குளித்து விட்டு கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெறு பேறு பெற்றான்.
குற்றாலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் அருவிகளில் குளித்து விட்டு கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வாரமும் முதல் நாள் கார்த்திகை சோமவார சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இந்த சோமவாரத்தில் பெண்கள் கணவருக்கு நீண்ட ஆயுளை வேண்டி அதிகாலை வேளையில் குற்றால அருவியில் நீராடி அருகில் உள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் பூஜை நடத்தி தாலியில் பொட்டு வைத்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்தாண்டு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று குற்றாலம் மெயின் அருவியில் ஏராளமான பெண்கள் அதிகாலை 5 மணிக்கு நீராடி அருகில் உள்ள செண்பக விநாயகர் கோவிலில் 11 முறை சுற்றி வந்து நாக கன்னிகளுக்கு பழம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். இந்த சோமவார பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சோமவாரக் விரத கதை
ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும் பழுதடைந்து இருந்தது. ஆகையால் அவ்வூர் ஜனங்கள் அக்கோயிலில் பூதம், பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ஆகையால் எவரும் அக்கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் அது சின்னச் கோயிலாக இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து இருந்தது. அதனால் சிவனும் பார்வதியும் அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான் முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம் செய்து கொண்டும் அமைதியாக இருப்பார்கள்.
ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி தேவி ஜெயித்தார். சிவன், அதை ஒத்துக்கொள்ளாமல் நானே ஜெயித்தேன் என்றார். எனவே மறுபடியும் இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார். ஆனாலும் சிவன், நானே வென்றேன் என்றார். உடனே பார்வதி தேவி, தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்று கூறி கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
சிவன் சங்கல்பத்தில் அப்பொழுது ஒரு தபோதனர் அங்கு வந்தார். அவரைப் பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம் யார் வென்றோம், என்று கேட்போம் என்றார். சிவனும் அதற்கு சம்மதித்தார். அப்பிராமணர் அருகில் வந்ததும், எங்கள் இருவரில் யார் வென்றார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு பிராமணர் காதால் கேட்பதைக் காட்டிலும் கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை விளையாடினார்கள். மூன்று முறையும் தேவியே ஜெயித்தார். ஆனால் பிராமணர் சிவனே, ஜெயித்தார் என்று கூறினார்.
இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம் ஆகக்கடவது என்று சாபமிட்டார். உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம் எடுத்து சீழ், புழு முதலியன வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் சிவனிடம் விமோசனம் கேட்டார். அதற்கு சிவனோ, அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்; அதை மாற்ற முடியாது என்றார். ஆனால் சிவன், தன் சங்கல்பத்தினால் சோமவார சமத்காரம் நடத்த நினைத்தார்.
தன்னை காக்க வேண்டிய சிவனே இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து கிணற்று அருகில் சென்றார். அப்பொழுது சிவன், சங்கல்பத்தில் அங்கு ஒரு தேவலோகப் பெண், இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள். அவளும் இந்திரன் சாபத்தினால் பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள்.
கிணற்றில் விழச்சென்ற பிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால் மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழு ஜென்மத்திற்கும் பாவமாயிற்றே ! பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்? என்று அந்த தேவலோகப் பெண் கேட்டாள். அதற்குப் பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார்.
அதற்கு அந்தப் பெண், 16 சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால் எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள் அருகிலுள்ள விதர்பநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார விரத மகிமையைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம் இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள்.
விதர்பநகர் சென்ற அந்த பிராமணர், கிணற்றடியில் இருக்கும் பெண்களை சிறுபெண்கள் என்றுகூட நினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால் தங்களுக்குத் கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும் முறையையும் கூறினார்கள்.
இந்த கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும் முடிக்கலாம். ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம்.
சோமவார விரத பலன்
சிவபூஜை செய்ய வேண்டும். சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுகொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு விட்டு ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது.
இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும் வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்க அவளும் அப்பெண்கள் கூறியதையே கூறினாள். பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார். விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை நிச்சயம் தருவார் என்பது உறுதி.