மனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசியுங்கள்
மார்கழியில் கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதிகம்.
மதுரை: மார்கழி மாதம் 27ஆம் நாளான இன்று வைஷ்ணவத் திருத்தலங்களில், கூடாரவல்லி வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில் திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும், சண்டை போட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாக கணவனும் மனைவியும் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும் பெருமாள் கோவிலில் அன்னை ஆண்டாளை வணங்குவது சிறப்பாகும்.
இந்த நாளில் அக்கார அடிசலும், வெண்ணெய்யும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் மானுடப்பெண்ணாக கோதை நாச்சியார் என்னும் நாமத்துடன் அவதரித்த ஆண்டாள் இன்று தனது மனதிற்கு பிடித்த மாதவன் கோவிந்தனை மணாளனாக அடைந்த தினம். மார்கழி முதல் நாள் தொடங்கி 26 நாட்களும் அதிகாலையில் எழுந்து நீராடி உருகி உருகி பாடி அந்த அன்பின் அடையாளத்திற்கு வரமாக கண்ணனையே பெற்றவள்.
மாதங்களில் சிறந்தது மார்கழி. அதை தனுர் மாதம் என்றும் போற்றுகிறோம். மார்கழி மாதம் தேவர்களின் நேரமான விடியற்காலையில் "யார் ஒருவர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, பக்தியுடன் இறைவனை வழிபடுகிறார்களோ அவர்கள், ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபாடு செய்த பலன்களை தனுர்மாதமான மார்கழி மாத ஒருநாள் வழிபாட்டில் கிடைக்க பெறுகிறார்கள். ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடலை பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரஅடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
அக்கார அடிசல் வேண்டுதல்
பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார்.
வெண்ணெய் அக்கார அடிசல்
இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் மார்கழி 27ஆம் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
குரு சுக்கிரன் அருள்
ஜோதிட ரீதியாக கூடாரவல்லிக்கு குருவும் சுக்கிரனுமே காரக கிரகம் ஆகின்றனர். குருவும் சுக்கிரனும் ஜோதிடத்தில் சுபர்கள் இந்த கிரகங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்துவிட்டாலே வாழ்வில் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். திருமணம், குழந்தை பேறு, வசதி வாய்ப்பு , மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்து சுகங்களும் கிடைக்க குரு மற்றும் சுக்கிரனின் அருள் வேண்டும்.
ரிஷபம் துலாம் தனுசு மீனம்
கூடாரவல்லியின் சிறப்பு உணவான அக்காரவடிசலுக்கு குருவும் சுக்கிரனும்தான் காரகர். நெய் மற்றும் இனிப்பின் காரகர் குரு பகவான். சுவையான இனிப்பு உணவிற்கு சுக்கிரனும் காரகர் தான். கால புருஷ ராசிபடி குரு பகவான் ஒன்பது மற்றும் பன்னிரெண்டாம் வீடுகளான தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதிகளாக விளங்குகிறார். மேலும் சந்திரனின் வீடான கடகத்தில் குரு உச்சமாகிறார். சுக்கிர பகவான் போஜன ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடான ரிஷபம் மற்றும் கணவன் - மனைவி, நண்பர்கள், பொதுத்தொடர்பு, கூட்டாளிகள் ஆகிய இடமான ஏழாம் வீட்டின் ராசியான துலாராசிக்கும் அதிபதியாவார்.
யோகம் பெற்றவர்கள்
தனுசு மற்றும் மீனம் ராசி மற்றும் லக்னமாக அமையப்பெற்றவர்கள் தனுசு மற்றும் மீனத்தை போஜன ஸ்தானமாக கொண்டவர்கள். ரிஷபம், துலாம் ராசிகளை லக்னமாகவோ, சந்திர ராசிகளாகவோ கொண்டவர்கள். ரிஷபம் மற்றும் துலா ராசிகளை இரண்டாம் வீடாகக் கொண்டவர்கள். எந்த ராசி லக்னமாக இருந்தாலும் லக்னத்தில் அல்லது போஜன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருவோ சுக்கிரனோ இருவரும் சேர்ந்தோ நிற்க பெற்றவர்கள். குருவும் சுக்கிரனும் திரிகோணத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள் குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னம் மற்றும் சந்திர கேந்திரங்களில் நின்று ஹம்ச யோகத்தை பெற்றவர்கள். சுக்கிர பகவான் ஆட்சி உச்சம் பெற்று மாளவியா யோகம் பெற்றவர்கள் குருவும் சுக்கிரனும் எந்த விதத்திலேனும் பரிவர்தனை பெற்றவர்கள் அற்புதமான யோகம் கொண்டவர்கள்.
ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி
பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி மார்கழி 27ஆம் நாள் கொண்டாடப்பட்டாலும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தை முதல்நாளில் அதிகாலை கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நெய் ஒழுக அக்கார அடிசல் படைத்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கும் வடபத்ரசாயி பெருமாளுக்கும் படைக்கின்றனர்.
ஒற்றுமை தரும் நாள்
இந்த கூடாரவல்லி நாளில் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 27வது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரத்தைப்பாடி ஆண்டாளையும் ஸ்ரீரங்காநாதரையும் வணங்கலாம். இதன் மூலம் திருமணமாகாத கன்னிப்பெண்களுக்கு மனதிற்கு பிடித்த கணவன் கணவனாக வருவார். இதேபோல நம்முடன் சண்டை போட்டுக்கொண்டு நம்மை விட்டு விலகிய உறவுகள் ஒன்று சேருவார்கள். ஆண்டாளுக்கு புதுப்புடவை சாத்தி, அக்காரஅடிசல் நைவேத்தியம் செய்து வணங்குங்கள் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும்.