கூவாகம் கூத்தாண்டாவர் கோவில் திருவிழா 2019: அரவாணை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
கூவாகத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகபுகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த 2ஆம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. வருகின்ற 15ஆம் தேதி மிஸ் கூவாகம் போட்டியும், 16ஆம் தேதியன்று அரவானுக்காக தாலி கட்டிக் கொள்ளும் வைபவமும், 17ஆம் தேதி அரவாண் களப்பலியும் நடைபெற இருக்கின்றது.
கூவாகம், நத்தம், தொட்டி, குப்பம், வேலூர் உட்பட ஏழு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து படையல் செய்தனர். பின்னர் படையில் இடப்பட்ட கூழ் அங்குள்ள பெரிய கொப்பரையில் ஊற்றப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த திருவிழாவிற்கு இந்தியாவில் புதுடெல்லி, மும்பை, கல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து குவிந்துள்ளனர். 18 நாட்களும் தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டியுள்ளது. கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர்.
அரவாண் திருமணமும் திருநங்கைகள் விதவைக் கோலமும்
ராஜகுமாரன் என்று அழைக்கப்படுகிற அரவாண் அர்ஜுனனின் மகன். போரில் வெற்றி பெறுவதற்காக அரவாணை பலி கொடுக்க பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள். அரவாணும் இதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறான் ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான். தான் இறப்பதற்கு முன், திருமணம் செய்ய வேண்டும் என்பதே. நாளை இறக்கப்போகும் ஒருவனை மணந்து அடுத்த நாள் விதவைக்கோலம் பூண எந்தப் பெண்ணும் முன் வர மறுக்கிறாள். இதைப் பார்க்கும் கிருஷ்ண பகவான் பேரழகியாக மோகினி அவதாரம் எடுத்து அரவாணை மணந்து, தாம்பத்திய உறவு கொண்டு மறுநாள் விதவையாகிறார். அந்தக் கிருஷ்ண வடிவம் தான் திருநங்கைகள்! அதனை நினைவுகூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் இந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடைபெறுகிறது. அரவாண் களப்பலியும், திருநங்கைகள் திருமணமும், விதவை கோலம் பூணுவதும் நிகழ்கிறது.
மணப்பெண் அலங்காரம்
வருகின்ற 15ஆம் தேதி மிஸ் கூவாகம் போட்டியும், 16ஆம் தேதியன்று அரவானுக்காக தாலி கட்டிக் கொள்ளும் வைபவமும் நடைபெற இருக்கின்றது. அரவாணை கணவராக ஏற்று திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்வார்கள். பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள் புதுமணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்து கொண்டு அழகாய் வலம் வருவார்கள்.
அரவாண் களப்பலி
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் இந்த முக்கிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்திரை தேரோட்டமும், அன்றே அரவானுக்காக திருநங்கைகள் விதவைக் கோலம் பூண்டு கதறி அழும் வைபவமும் நடைபெறும். அன்றுடன் திருநங்கைகள் சொந்த ஊர் திரும்புவர்.
குழந்தை பேறு கிடைக்கும்
அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. உறுமைசோறு (பலிசாதம்) படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் நேற்று முதல் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர்.