கூவாகம் திருவிழா 2020 - கொரோனா வைரஸ் கூத்தாண்டாவர் கோவில் திருவிழா ரத்து
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சித்திரை மாதத்தில் நடைபெற உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் கூடுவார்கள். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வீரியமாக பரவி வரும் நிலையில் மக்கள் கூடுவதை தடுக்கவே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகபுகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது டெல்லி, மும்பை, கல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வந்து கூடுவார்கள். விழா தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை தினம் தினம் ஒரு நிகழ்ச்சி என கூவாகம் கிராமமே களைகட்டும்.
கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர். அரவானை வணங்குவதன் மூலம் தீராத நோய்கள் தீரும் எனவும், குழந்தையில்லாப் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. உறுமைசோறு படையலில் படைக்கப்படும் பலகாரங்களையும், உணவையும் வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருவிழா தொடங்கிய நாள் முதல் கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவார்கள்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. நாடு முழுவதும் கோவில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கூவாகத்தில் வரும் 21 ஆம் தேதி தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.