கிருஷ்ண ஜெயந்தி 2019: வீடுகளில் பாத கோலம் போடுங்க... குட்டிக்கண்ணன் ஓடோடி வருவான்
கோகுலாஷ்டமி நாளில் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் திருப்பாதத்தை வரைந்தால் குட்டிக்கண்ணன் நம் வீட்டிற்கு ஓடேடி வருவான்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் யார் வீடுகளில் பாதம் வரைந்து கோலம் போட்டிருக்கிறார்களோ அவர்களின் வீட்டிற்கு கண்ணன் ஓடோடி வருவான் என்பது நம்பிக்கை, எனவேதான் கண்ணனை அழைக்க வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் பாத கோலம் வரைந்து அழைக்கின்றோம்.
கண்ணன் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக இன்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து மாவிலை தோரணம் கட்டி, பாத கோலம் வரைந்து கண்ணனை அழைப்பது வழக்கம். கண்ணனுக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து வைத்து வெண்ணெய் பிரியனுக்கு கொடுப்பது ஐதீகம்.
கண்ணனின் திருப்பாதத்தை வீட்டில் ஏன் கோலமாக வரைகிறோம் என்பதற்கு ஒரு புராண கதையே உள்ளது.
நாரத முனிவர் ஒரு சமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப்பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும், ஆனந்தமும் அடைந்தார்.
இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ண பரமாத்மா. நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் திருவடிக் கோலம் போடுகிறார்கள்.
கிருஷ்ணர் 8 வகையாக பக்தர்களுக்கு காட்சிதருகிறார்.
சந்தான கோபால கிருஷ்ணர் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
பால கிருஷ்ணன் : தவழும் கோலம்.
காளிய கிருஷ்ணன் : காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
கோவர்த்தனதாரி : கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
ராதா-கிருஷ்ணன் : வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
முரளீதரன் : இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம்.
மதன கோபால் : அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.
பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
இவ்வாறு 8 வகைகளில் காட்சித்தரும் கிருஷ்ணரின் பாதத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது.
எட்டு அதிர்ஷ்ட எண் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் கண்ணன் எட்டாவது குழந்தையாக அவதரித்தவர். அஷ்டமி திதி நல்லவைகளுக்கு ஏற்றதில்லை என்பார்கள். எட்டாவது திதி அஷ்டமி திதி அந்த நாளில்தான் கண்ணனின் அவதாரம் நிகழ்ந்தது. எனவே சகல செல்வங்களும், சுபிட்சமும் கிடைக்க இன்றைய தினம் மாலையில் வீடுகளில் பாத கோலம் வரைந்து கண்ணனை வீட்டிற்கு அழையுங்கள் கண்ணன் உங்கள் வீட்டிற்கு ஓடோடி வருவான்.