சின்னக்கண்ணன் அழைக்கிறான்... நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தி விழா தமிழகத்தில் கிருஷ்ணர் ஆலயங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி விழா நாடுமுழுவதும் இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. சிறப்பு பூஜைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோவில்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கண்ணனின் அவதாரமே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே யுகங்கள் தோறும் பகவான் கண்ணன் அவதரித்தார். கண்ணனை தினந்தோறும் வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள் என்கின்றன புராணங்கள்.
மகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த தினத்தையே ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
இஸ்கான் சார்பில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் ஆலயத்திலும் நெல்லையில் இஸ்கான் ஆலயத்திலும் இன்றும்,
கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா நகர முறைப்படி திங்கள்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர் அனைவருடனும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளார். கருவறையில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார். மார்பில் மகாலட்சுமி இருக்கிறார். அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம் தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும் ஒருங்கே உள்ளனர். இந்த ஆலயத்தில் இன்று ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதே போல கோபாலபுரம் வேணுகோபாலசுவாமி, ராயப்பேட்டை கவுடியாமடம், மயிலாப்பூர் நந்தலாலா டிரஸ்ட் ஆலயத்திலும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 9 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து, செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9.30 மணி வரையும் கிருஷ்ண ஜெயந்தி பொது தரிசனம் நடைபெறும்.
கிருஷ்ண அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம், வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள், மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி ஹரே கிருஷ்ண மந்திரம் சொல்வதற்கான ஜப மாலைகள் இலவச வழிகாட்டும் புத்தகங்களுடன் மலிவு விலையில் விநியோகிக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது வேணு கோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.
மதனகோபாலசுவாமி எனும் பெயருடன் பாமாருக்மிணியுடன், மதுரையில் கண்ணன் அருள்பாலிக்கிறான். ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன் பெரியாழ்வாருடன் வந்து இந்த மதனகோபாலரை தரிசனம் செய்து விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. இந்த ஆலயத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கண்ணன் நவநீத கிருஷ்ணனாக, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில் கோயில் கொண்டுள்ளான். தாமிரபரணியில் நீராடி இந்த பாலகிருஷ்ணனை தரிசித்து பால்பாயசம், வெண்ணெய் நிவேதித்தால் மழலைப் பேறு கிட்டுகிறது. சாபத்தால் மருத மரங்களான தேவர்களுக்கு சாபவிமோசனம் தந்தவர் இந்த கண்ணன். இங்கும் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து, பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பாயாசம் பிரசாதம் சிறப்பானது.
கேரளம், திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் அருள்கிறான் உன்னி கிருஷ்ணன். கல்லாலோ, வேறு உலோகத்தாலோ அல்லாமல் பாதாள அஞ்சனம் எனும் மூலிகையால் வடிவமைக்கப்பட்டவர் இவர். குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம், 'பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது. இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட ஆயுளுடன் ஒற்றுமை மிகுந்து நலமாக வாழ்வர் என்பது நம்பிக்கை. கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஆலயங்களுக்கு சென்று கிருஷ்ணரை தரிசனம் செய்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.