நெல்லை கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலம்
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லை: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் ஜெயந்தி விழா கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்ணன் அவதரித்த நாளான கிருஷ்ணஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீடுகளில் சீடை, முருக்கு சாமிக்கு படைத்து வழிபட்டனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் தமிழர்தெருவில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது.
குட்டி கிருஷ்ணன் ராதை
இதையொட்டி இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அகண்ட நாம ஜெபம் நடந்தது. இரவு 6.30 மணிக்கு சாயரட்சையும், இரவு 7 முதல் 8 மணி வரை சகஸ்ரநாம அர்ச்சனையும், 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருதலும், இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை நாம கீர்த்தனம், கும்ப ஜெபம், அபிசேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு கிருஷ்ண ஜனனம், தீபாராதனை நடைபெறும்.
கிருஷ்ணன் ராதை ஊர்வலம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து ஊர்வலம் வந்தனர். அனைவரையும் கிராம மக்கள் கண்டு ரசித்தனர். பஜனையும் நடைபெற்றது. கிருஷ்ணர் கதைகள் கூறப்பட்டன. திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு உறியடி உற்சவம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்து வருகின்றனர்.
கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மலை மீது அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயில், ராமர் கோயில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பிலும், கிருஷ்ணர்கோயில், கல்யாண வெங்கடேஸ்வரர், பாண்டுரங்கன், கோபசந்திரம் தட்சின திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்
கிருஷ்ணகிரி தர்மராஜா கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கிருஷ்ணர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல பழையபேட்டை கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அத்துடன் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணனுக்கு வெண்ணெய் அலங்காரம்
திருப்பூர் ராயபுரத்தில் பூமிநீளா சமேத வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா உற்சவம் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணசாமிக்கு வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.