கிருஷ்ண ஜெயந்தி: குட்டிக்கண்ணன் வீட்டுக்கு வர என்ன செய்யணும் தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. குட்டிக்கிருஷ்ணன் வீட்டுக்கு வர இன்றைய தினம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சென்னை: பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. துவாபரா யுகம் தொடங்கும் முன்பாக பூமியில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பூமியில் பாரம் தாங்க முடியாத பூமா தேவி இறைவன் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட தானும், ஆதிசேசனும் அவதரிப்போம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். துவாபரா யுகத்தில் ஆதிசேசன் பலராமனாகவும், மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும் அவதரித்தனர்.
விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
அப்படிப் பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பது வழக்கம்.
கண்ணன் வருவான்
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கண்ணன் செய்த சில லீலைகளை பார்க்கலாம்.
சாப விமோசனம் கொடுத்த கண்ணன்
தாய்மாமன் கம்சன் கண்ணனை கொலை செய்ய துடித்தான். பிறந்த உடனேயே வாசுதேவரின் நண்பர் நந்தகோபரின் ஆயர்பாடிக்கு சென்று அங்கு யசோதையின் அரவணைப்பில் வளர்ந்த கண்ணன் எண்ணற்ற லீலைகளை செய்திருக்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடுவது. கோபியர்களுடன் உற்சாகமாக விளையாடுவது என சுற்றித்திருந்த கண்ணன் சில அரக்கர்களை வதம் செய்ததோடு சிலருக்கு சாப விமோசனமும் கொடுத்திருக்கிறான்.
குட்டிக்கண்ணனின் அருளாசி
கோகுலவாசிகள் கண்ணனின் குறும்புகளை ரசித்தாலும் யாசோதாவிடம் வந்து புகார் செய்தனர். கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை உரலில் கட்டினாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜூன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்தன அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.
சாபம் நீங்கியது
நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள். நாரதர் அளித்த சாபத்தினால் அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜூன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் சாப விமோசனம் பெற்று கண்ணனை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள். சாபம் நீங்கி மீண்டும் தேவர்களாக உருமாற்றம் அடைந்த இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து வணங்கி துதித்து மறைந்தனர்.