For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா 29ல் கொடியேற்றம் - அக். 8ல் சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா 29ஆம்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 8ஆம் தேதி சூரசம்ஹ

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. குலசையில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.

மைசூரு தசராவிற்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது குலசை தசரா விழா. நவராத்திரியை முன்னிட்டு ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் முடிந்ததும் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டுவார்கள். அதன் பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

காளி வேடம்

காளி வேடம்

இது அம்பிகைக்கான திருவிழா என்பதால் காளிக்கே அங்கு அதிக முக்கியத்துவம். நீண்ட சடை முடி அலங்காரம், கையில் திரிசூலம், முகம் முழுக்க செந்நிற வர்ண பூச்சு, கருங்காளியாக இருந்தால் கருமை நிற வர்ண பூச்சு, கழுத்தில் கபால மாலை, அதற்கான பிரத்யே ஆடைகள், வாயில் கோரப்பல் என மிகவும் கஷ்டமான காளி வேடத்தை போட்டு காணிக்கை சேகரிக்கின்றனர்.

 48 நாட்கள் விரதம்

48 நாட்கள் விரதம்

காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் கடும் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். பிரம்மச்சரியம், பச்சரிசி சாப்பாடு என மனதையும், உடலையும் அடக்கி ஆண்டு விரதமிருக்கின்றனர்.

நேரில் வரும் அம்மன்

நேரில் வரும் அம்மன்

காளி வேடத்தை பார்க்கவே அச்சமாக இருக்கும். ஆனால் காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் காணிக்கை கேட்கின்றனர்.

மகிஷாசூரவதம்

மகிஷாசூரவதம்

திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நாளான அக்டோபர் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. வேடம் அணிந்த பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வரத்தொடங்குவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.

பண்டிகை

பண்டிகை

9ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெரு வீதி உலா சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும். அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளில் உள்ள காப்புகளை அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.

English summary
Kulasekhara Pattinam Mutharamman Temple Dasara festival begins on Sep 29,2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X