குலசை தசரா கோலாகலம்... அம்பு போட்டு அசுரனை சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்
விஜயதசமி தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அம்பு போடும் விழாவாகவும், அசுரன் அழிக்கப்பட்ட தினமாகவும் கொண்டாடப்பட்டது.
மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜெய் காளி, ஓம் காளி என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
மைசூரு தசராவிற்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது குலசை தசரா விழா. நவராத்திரியை முன்னிட்டு ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு கடந்த 10ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து பணம் வசூல் செய்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.
விஜயதசமி நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் இரவு 12 மணி அளவில் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
ஆணவத்துடன் பல்வேறு உருவங்களில் போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்று வெற்றி முழக்கமிட்டனர். பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார்.
பழனியில் வன்னிமரத்தில் அம்பு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
கோவில் எதிரே அமைக் கப்பட்டிருந்த மேடையில் வன்னி, வாழை மரங்களாக மாறி நின்ற வன்னிகாசூரனை வில்-அம்பு கொண்டு முருகப்பெருமானின் பிரதிநிதியாக புலிப்பாணி பாத்திரசுவாமி வதம் செய்தார். இதைத்தொடர்ந்து வில்-அம்பு உள்ளிட்ட அயுதங்கள் முத்துக்குமாரசுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
திருச்சியில் விஜயதசமி
நவராத்திரிவிழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த 10ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. நவராத்திரி விழாவையொட்டி கடந்த 16ஆம் தேதி ரங்கநாச்சியார் திருவடிசேவை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கர் கோவில் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவிலில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. அன்று முதல் அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளினார். விஜயதசமியான நேற்று இரவு 7.30 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க வன்னி மரம் சென்றடைந்தார். அங்கு, அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.