கும்பகோணம் மகாமக குளத்தில் கும்பேஸ்வரர் புனித நீராடும் நேரம் தெரியுமா?
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமகம் குளத்தில் 12ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெறும் தென்னகத்தின் கும்பமேளா என்று பெருமையுடன் மகாமகம் புனித தீர்த்தவாரி இன்று நடை பெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்தும் குவிந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தல நேரப்படி இன்று பகல் 11:18மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்குள் ரிஷபலக்னத்தில், கும்பேஸ்வரர் மகாமகம்
குளத்திற்கு வருகை தந்து புனித நீராடி பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்
மகாமகம் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய நாள் முதல் லட்சக்கணக்காண பக்தர்கள் இரவு பகலாக புனித நீராடி வருகின்றனர். இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். 10ம் நாளான இன்று புனித தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
கும்பகோண புவி நிலைப்படி மகம் நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் இருக்கும் பகல் 11:18 முதல் பிற்பகல் 1:20 வரை உள்ள காலமே மகாமகம் புனித நீராடல் காலமாகும்.
சிம்மராசியில் மகம்
இன்றைய தினத்தில் வளர்பிறை பெளர்ணமி இரவு 11:51 வரை பின்னர் பிரதமை திதி மகம் நட்சத்திரம் அன்றைய தினம் நாள் முழுவதும் நடப்பில் இருக்கிறது அதிகண்ட யோகம் இரவு பின் 1:43 மணி வரை, பத்திரை கரணம் பகல் 11:09 வரை அடுத்து பவம் கரணம் இரவு 11:49 வரை கூடிய சுப தினத்தில் சூரியன் கும்பம் ராசியிலும், சந்திரன் சிம்மம் ராசியில் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்மம் ராசியிலும் நிற்க மகாமகம் பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை கடைபிடிக்கப்படுகிறது.
ஒரே நேர் கோட்டில்
சூரியன்,பூமி,சந்திரன்,குருகிரகம், மகம் நட்சத்திரம் ஆகிய ஐந்து வானியல் பொருட்கள் நேர்கோட்டில் வரும் காலமாகும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோல் வரும்.
ஆதிகும்பேஸ்வரர் கோவில்
இந்த காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் குரு கிரகம் முழுநிலவு போல் முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும் இதை தொலை நோக்கி மூலம் எளிதாக காணலாம். இதை கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழாவாக மகாமகம் கொண்டாடப்படுகிறது.
இக்குளத்தின் சிறப்பு:
மகாமக குளத்தில்,யமுனை,சரஸ்வதி, கோதாவரி,நர்மதா,சிந்து,காவேரி உள்ளிட்ட கங்கை முதல் அனைத்து பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் மக்கள்
நீராடிய பலன்கிட்டும். மேலும் இப்பிறவியில் நமது பாவச்சுமைகளை நீக்கவும், புனிதத் தன்மையை பெறவும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வழிபடுதல் நன்று.
கோவில் தெப்பக்குளத்தில் நீராடலாம்
மகாமகத்தன்று கும்பகோணம் வர இயலாதவர்கள் செய்ய வேண்டியது : தங்கள் இருப்பிடத்திற்க்கு அருகில் உள்ள சிவன் கோவில் குளத்தினில் நீராடி, கும்பேஸ்வரரை தியானித்து ருத்ரபாராயணம், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் ,சிவஸ்லோகங்கள்,படித்து வில்வம் சாற்றி பூஜை செய்வதனால் கட்டாயம் மகாமகம் குளத்தில் நீராடும் பலன்கிட்டும்.
மகா மகம் நீராடல்
இன்று"ஆகாமாவை"என்பதால் சூரிய உதயத்தில் நதி,குளம்,ஆறு,கடல் நீராடல் மிக மிக நன்று. கூடுதலாக நண்பகலில் மகாமகம் வழிபாட்டிற்காக மீண்டும் நீராடல் அவசியமாகும்.
மாசி மகம்
மேலும் மாசிமாதத்தில் ஏதேனும் ஒருநாளில் மகாமகம் குளத்தில் புனித நீராடல் செய்வது நன்மை தரும் என்கின்றனர் சோதிடவியலாளர்கள்.