திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் எல்லா பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசம் 1 லட்டு 50 ரூபாய்
திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கும் பழக்கமானது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவானது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டுகள் வழங்கப்ப
மதுரை: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக அனைவருக்கும் இலவசமாக ஒரு லட்டும், ஒரு லட்டு ரூ.50க்கும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஜனவரி 20முதல் அமலுக்கு வருகிறது.
திருப்பதி என்ற உடனேயே நம் நினைவுக்கு வருவது லட்டு தான். மற்ற இந்து கோவில்களிலும் கோவில் பிரசாதமாக லட்டு கொடுக்கப்பட்டு வந்தாலும், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டு போல் வராது என்பதே உண்மை. அவ்வளவு ஏன், திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலிலும் பிரசாதமாக லட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட, திருமலையில் வழங்கப்படும் லட்டு போல் இல்லை என்பதே நிச்சயம். திருமலையில் கொடுக்கப்படும் லட்டு உலகப்பிரசித்தி பெற்றது.
திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கும் பழக்கமானது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவானது. அதற்கு முன்பு வரையிலும், பிற இந்து கோவில்கள் போல், முறுக்கு, தயிர்சாதம், ஜாங்கிரி, போளி, அப்பம், அதிரசம், மனோகரம், பாயாசம், தோசை, ரவா கேசரி போன்றவை தான் வழங்கப்பட்டு வந்தது. மேலும், வெங்கடாசலபதியை தரிசனம் செய்துவிட்டு வெளியில் வருபவர்களுக்கு மனோகரம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
பின்னர், 1715 ஆம் ஆண்டு முதல் தான் லட்டு பிரசாதமாக வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்த பழக்கம் 1943ஆம் ஆண்டு வரையிலும் இருந்து வந்தது. ஆனால், திருமலைக்கு வராதவர்களும், திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவர்களும் திருப்பதி லட்டுக்காக ஏங்கினார்கள். எனவே பக்தர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்து பேசி, பிரதி சனிக்கிழமை தோறும் வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வருபவர்களுக்கு லட்டு வழங்க முடிவெடுத்தனர். அது போலவே வழங்கப்பட்டு பின்னர் அனைவருக்கும் அனைத்து நாட்களிலும் லட்டு வழங்கும் நடைமுறை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த லட்டு பிரசாதத்தை தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூடுதலாக செலவிடுகிறது. ஒரு லட்டு பிரசாதம் தயார் செய்ய திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.38 செலவாகிறது. நடைப்பயணமாக மலையேறி வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாகவும், தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கும் மலையேறி செல்லும் பக்தர்களுக்கும், ஒரு லட்டு ரூ.10 வீதமாக 2 லட்டுகளும், ஒரு லட்டு ரூ. 25 வீதமாக மேலும் 2 லட்டுகளும் வழங்கப்படுகிறது. மேலும், ரூ. 300 சிறப்பு தரிசனம், விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
இதனால், ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து லட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேவஸ்தான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மற்றும் அதிகாரிகளின் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெங்கடாசலபதியை தரிசிக்கும் பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்வது தொடர்பான இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்ததை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக, வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதோடு, கூடுதல் லட்டு தேவைப்படுவோருக்கு ஒரு லட்டு ரூ.50க்கு வழங்கவும், எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் மானியம் ரத்து செய்யப்படும். இதனால், பக்தர்கள் இனி ஒரு லட்டுக்கு ரூ.50 செலுத்தி லட்டு பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.
மலையேறி திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஏற்கனவே ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 20 ஆயிரம் லட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. தினமும் சுவாமியை சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அதன்படி, தினமும் 55 முதல் 65 ஆயிரம் லட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மற்றபடி, ரூ.10 வீதம் 2 லட்டுகளோ, அல்லது ரூ. 25 வீதம் 2 லட்டுகளோ இனி வழங்கப்பட மாட்டாது. ஆதலால், அனைவரும் இனி ஒரு லட்டு ரூ.50க்கு வாங்க வேண்டி வரும். இதற்கு எந்தவொரு சிபாரிசு கடிதம் தேவைப்படாது. இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.400 முதல் 450 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.