தங்க கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி - சொர்க்கமாக மாறிய திருமலை
திருமலை திருப்பதியின் கோவிலின் பிரமோற்சவத்தின் முக்கிய விழாவான கருட சேவை நேற்று நடைபெற்றது. பக்தர்களின் கோலாட்டமும் பஜனைகளும், பல்வேறு வேடமணிந்த பக்தர்களின் அணிவகுப்போடு மலையப்பசுவாமி மாட வீதிகளில் வல
திருமலை: வைகுண்டமே திருமலைக்கு வந்து விட்டதோ என்று எண்ணும் படியாக பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
பிரமோற்சவத்தின் 5வது நாளான திங்கட்கிழமையன்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மகாவிஷ்ணு தன்னுடைய வாகனமாக கருடனை தேர்ந்தெடுத்ததால் பிரமோற்சவத்தின் போது மற்ற வாகனங்களை விட கருட வாகனத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருடனை பெரிய திருவடி என்றும் அழைத்து பெருமைபடுத்துகின்றனர்.
கருட சேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்படும்.
இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்திருக்கும் லட்சுமிஹாரம், தங்க சங்கிலி, மகர கண்டி போன்ற நகைகளை கருட சேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள்.
மோகினி அலங்காரம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5வது நாளான திங்கட்கிழமையன்று காலை மோகினி அலங்காரத்தில் மாய மோகத்தை போக்கும் வகையில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் நாச்சியார் திருக்கோலத்தில் உள்ள தனது உருவத்தை கிருஷ்ணராக மாறி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாச்சியாருடன் ஸ்ரீகிருஷ்ணரும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேவர்களுக்கு அமுதம்
பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி மாய வித்தை செய்து அசுரர்களை ஏமாற்றினார். அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின் 5வது நாள் உற்சவத்தில் மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பக்தர்கள் தரிசனம்
பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி தங்கம், வைரம், மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். நான்கு மாடவீதியில் 2 லட்சம் பக்தர்கள் கருட சேவையை தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டு நின்று கோவிந்தா, கோவிந்தா என்று விண்ணதிர பக்தி முழக்கத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஜொலிக்கும் திருமலை
இன்று காலையில் சிறிய திருவடியான அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தார். இன்று மாலை தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நாச்சியார்களுடன் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து கஜ வாகனம் எனும் தங்க யானை வாகனத்தில் பவனி வருகிறார். பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையை தொடர்ந்து, தங்கத் தேரோட்டமும் மிகவும் விசேஷம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.