தை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
கன்னியாகுமரி: ஆடி மாதம் பூலோகம் வந்து ஆறு மாத காலம் நம்முடன் தங்கியிருந்து நம்மை காத்த முன்னோர்களுக்கு நாம் நன்றி கூறி வழியனுப்பி வைக்கும் நாளே தை அமாவாசை. தை அமாவாசை தினமான இன்று மகோதய புண்ணியகாலமும் இணைந்து வருவதால் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கன்னியாகுமரி, வேதாரண்யம், ஸ்ரீரங்கம், கோடியக்கரை, குற்றாலம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடிய ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பது மரபு.
பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்று சேருவதாக ஐதீகம். அன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச்செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பெற வேண்டும். தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
பித்ரு கடன் செய்யும் பலன்
நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். அதுவே நம்முடைய முன்னோர்கள் வந்தால் அவர்களுக்கு பிடித்தமானவைகளை கொடுத்து வழிபட வேண்டும். பித்ருக்களுக்கு தேவையானவைகளை கொடுப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பங்கள், பிரச்சினைகள் தீர்ந்து விடும். நம்மைக்காண பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணமே அவர்களை மகிழ்விக்கிறது.
முன்னோர்கள் சாபம்
நம்மை பாதுகாத்த முன்னோர்களுக்காக தர்பணம் அளித்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம். இவ்வாறு தர்பணம் அளிக்காவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறது சாஸ்திரம்.
சிறப்பு வாய்ந்த அமாவாசை
அமாவாசை ஞாயிறன்று வந்து அன்று திருவோணம், அவிட்டம், அசுவினி, திருவாதிரை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களோடு சேர்ந்துவந்தால் அதை 'வ்யதீபாதம் புண்ணியகாலம்' என்பார்கள். இந்த நாள் நூறு சூரியகிரகணங்களின் போது முன்னோரை வழிபட்ட பலன் கொடுக்கும். அதுவே குறிப்பாக தை அல்லது மாசிமாதங்களில் நிகழ்ந்தால் இதை 'அர்த்யோதய புண்ணியகாலம்' என்றும் திங்கள்கிழமையன்று நிகழ்ந்தால் 'மகோதய புண்ணியகாலம்'என்றும் குறிப்பிடுவர். இந்த நாள்களில் நதிகளில் அல்லது சமுத்திரத்தில் நீராடி முன்னோர் வழிபாடும் இறைவழிபாடும் செய்ய, கோடி சூரியகிரகணத்தன்று வழிபாடு செய்த பலன்கள் கிட்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம்
தை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதலே சென்னை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் காலை முதலே ஏராளமானவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். காவிரி பாயும் திருவையாறு, மயிலாடுதுறையிலும் மக்கள் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.
தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
நாகை மாவட்டம் கோடியக்கரை சேதுக்கடலிலும், வேதாரண்யம் சன்னதிக் கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு பச்சரிசி, காய்கறிகள், பழங்கள் படைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கும்பகோணம் மகாமக குளத்தில், ஏராளமானோர் புனித நீராடி கிழக்கு கரையில் முன்னோர்களுக்கு அரிசி, காய்கறிகள் படைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
பித்ரு தர்ப்பணம்
தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம் தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்திமிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம் என்பதால் ஏராளமானோர் அதிகாலை முதலே திதி கொடுத்து வழிபட்டனர்.
எள், பச்சரிசி
நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில், இன்று அதிகாலையிலேயே ஏராளமானோர் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், படையல் இட்டும் வழிபாடு செய்தனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில், ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, எள், பச்சரிசி மற்றும் பூக்களினால் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.