பணக்கஷ்டம் நீங்கி செல்வ செழிப்பை தரும் லக்ஷமி குபேர பூஜை!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
அனைத்து வாசகர்களுக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!" இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான்.
லக்ஷமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லக்ஷமி குபேர நாமம் சொல்லி வழிப்பாடு செய்தால் பலன் கிடைக்கும்.
லக்ஷமி பூஜை என்பது அன்னை மகாலக்ஷமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். இந்த பூஜை ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளின் பிரதோஷ வேளையிலும் கோதூளி லக்ன காலத்திலும் செய்யப்படுகிறது. பூஜைக்கான நேரம் அமாவாசை திதியை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. சூரியன் துலா மாதத்தில் சஞ்சரிக்கும் வேளையில் சந்திரனை சந்திக்கும் அமாவாசை நாளில் லக்ஷ்மியை ஆராதனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என நம்பபடுகிறது. ஐப்பசி மாதத்தை துலா மாதம் எனப்படுகிறது. துலாம் என்பது சமத்தை குறிக்கும். வணிகர்களுக்கு வரவ செலவு சமமாக இருக்க வேண்டும் என்று அன்னையை வேண்டி இந்நாளில் பூஜை செய்வர். வட இந்தியாவில் இந்நாளில் வியாபாரிகள் பழைய கணக்குகளை முடித்துவிட்டு
புதிய கணக்குகளை துவங்குவர்.
சூரியன் துலா அமாவாசை நாளில் தன்னுடைய இரண்டாவது சஞ்சரத்தை துவங்குவதாக நம்பபடுகிறது. சாதாரணமாக அமாவாசை நாள் நல்ல நாளாக கருதபடுவது இல்லை. ஆனால் லக்ஷ்மி பூஜை வருவதாலும், சூரியன் தன் சஞ்சாரத்தை மாற்றுவதலும் இந்நாள் சுப நாளாக கருதப்படுகிறது .மகாராஷ்டிரம் ,குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் லக்ஷமி பூஜை மிகுந்த விசேஷமாக கொண்டாடப்படுகிறது . பெரும்பாலும் இந்நாள் தீபாவளியாக கொண்டடாடப்படுகிறது செல்வம் பெருக்கும் லக்ஷமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.
மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். தீபாவளி தினத்தின் மாலை 6 மணிக்கு முன்பே லக்ஷமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலக்ஷமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலக்ஷமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தான்யம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
தங்கள் வீடுகளை இம்மி அளவு கூட அழுக்கில்லாமல் சுத்தம் செய்து தூய்மையைப் பெரிதும் விரும்பும் தெய்வமான லக்ஷமியை
வீட்டுக்கு வரவழைக்கிறார்கள். அதன் வாயிலாக நன்மையையும், வளத்தையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய இந்த வீட்டிலுள்ள பெண்கள் லக்ஷமி தேவியாகக் கருதப்படுவதால், அவர்கள் பட்டு ஆடைகள் உடுத்தி, தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலிகளையும் பொன் ஆரங்களையும் அணிந்து லக்ஷமி அவதாரமாகவே மாறிவிடுகிறார்கள்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லக்ஷமி குபேர பூஜை செய்யலாம். அமாவாசை அன்று லக்ஷமி பூஜையானது கடைபிடிக்கப்படுகிறது. அன்று பெண்கள் விநாயக பூஜை செய்த பின், லக்ஷமி தேவியை ஆராதிக்க வேண்டும். லக்ஷமி தேவியை பனீர் ,சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும் .பின்னர் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும் .பூஜையின் போது ஸ்ரீ ஸூக்தம், லக்ஷமி அஷ்டகம் , வேத மந்திரங்கள் ஆகியவற்றை ஜெபிக்கலாம் .
பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும் .வடக்கே இப்பூஜை மிக பிரபலம் .குஜராத் மாநிலத்தில் இதை சோப்டா பூஜை என்பர். இவ்வாறு எளிய பூஜையால் அன்னை மகிழ்ந்து நாம் வேண்டியதை தருவாள் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தில் செல்வ செழிப்பை தரும் லக்ஷமி குபேர யோகங்கள்:
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லக்ஷமி யோகத்தை தரும்.
ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லக்ஷமி யோகம் ஏற்படும் என புராதன ஜோதிட நூலான பாவார்த போதினி எனும் பலதீபிகை கூறுகிறது. செல்வத்தின் அதிபதியான லக்ஷமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது.
நவின விஞ்ஞான ஜோதிடத்தின் தந்தை எனப்படும் தெய்வதிரு டாக்டர் B V ராமன் ஐயா அவர்கள் தனது 300 யோகங்களை பற்றிய புத்தகத்தில் லக்ஷமி யோகம் தரும் கிரஹ இணைவுகளை பற்றி கூறுகையில்:
1. ஆட்சி, உச்சம் போன்ற பலம் பெற்ற லக்னாதிபதியும் ஒன்பதமதிபதியும் இணைவு பெருவது,
2.. பலம் வாய்ந்த லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நின்று லக்னாதிபதியுடன் சேர்க்கை பெறுவது.
3. ஒன்பதாமதிபதியும் சுக்கிரனும் ஆட்சியோ உச்சமோ அடைந்து கேந்திர திரிகோணங்களில் நிற்பது
லஷ்மி யோகம் தரும் கிரஹ அமைவு என குறிப்பிட்டுள்ளார்.
குபேர துல்ய ராஜ யோகம்:
ஒருவருடைய ஜாதகத்தில் தன காரக குருவும் செல்வ செழிப்பை அளிக்கும் சுக்கிரனும் உச்சமடைந்து திரிகோணங்களில் நின்று விட்டால் அவர் அரசராகவோ அல்லது அரசரை போன்ற செல்வ செழிப்புடன் இருப்பார் என பாவ குதுஹலம் எனும் பழம் பெரும் ஜோதிட சாஸ்திர நூலில் கூறப்பட்டிறுக்கிறது.
லக்ஷமி யோகம் பலன்கள்:
இந்த யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான்.
நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும்.
திரு முகேஷ் அம்பானி ஜாதகமும் லக்ஷ்மி யோகமும்:
இந்தியாவின் பணக்காரர்களின் வரிசையில் முன்னனியில் நிற்கும் திரு முகேஷ் அம்பானி அவர்களின் ஜாதகத்தில் ஜென வசிய ராசியாகிய துலா ராசி லக்னமாகி லக்னாதிபதி, லக்னத்திற்கு பாக்ய ஸ்தானம் எனப்படும் 9ம் வீட்டதிபதி மற்றும் எதிர்பாரத லாபத்தை தரும் 11ம் வீட்டதிபதி மூவரும் இணைந்து கேந்திர ஸ்தானத்தில் நின்று சம சப்தமமாக லக்னத்தை பார்த்து பலபடுத்துவதோடு லக்ஷ்மி யோகத்தையும் தந்தது. மேலும் பதினோரம் அதிபதி உச்சம் ஆனதும், தன காரகனான குரு 11ம் வீட்டில் நின்றது மேலும் பலம் சேர்த்தது எனலாம்.
எனவே உங்கள் ஜாதகத்தில் லக்ஷ்மி யோக அமைப்பு இல்லாவிட்டாலும் கவலை படவேண்டாம். இன்று லக்ஷ்மி குபேர பூஜை செய்தால் லக்ஷ்மி யோகத்தை பெற்று நீங்களும் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெறமுடியும் என சாஸ்திரம் கூறுகிறது.
இந்த வருடம் தன காரக குரு சுக்கிரன் வீட்டில் நின்று ராஜ கிரஹங்களான சூரியனும் சந்திரனும் அவர்களோடு சேர்ந்து நிற்கும் காலத்தில் லக்ஷிமி குபேர பூஜை செய்பவர்களுக்கு வாழ்வில் சகல வளங்களும் சேரும் என்பது நிதர்சனம்.