தீபாவளிக்கு லட்சுமி குபேர பூஜை ஏன் செய்யணும் தெரியுமா?
தன்வந்திரி பீடத்தில் தீபாவளித் திருநாளில் உலக நலன் கருதி ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகம், மஹா தன்வந்திரி ஹோமம் திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.
வேலூர்: தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம், நம் இல்லத்தில் செல்வம் பெருகும், மேலும்நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது ஐதீகம். தீபாவளி நாளான்று அக்டோபர் 27ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் இரவு 8.14 மணிவரை லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் தன்வந்திரி பீடத்தில் தீபாவளித் திருநாளில் உலக நலன் கருதி ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகம், மஹா தன்வந்திரி ஹோமம் திருஷ்டி துர்கா ஹோமத்தில் பங்கேற்கலாம்.
தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறது. ஒவ்வொருத்தர் மனதிலும் உள்ள தோஷங்களை நீக்கி தீப ஒளி போல் பிரகாசமான வாழ்க்கை தரக்கூடிய நாளே தீபாவளி ஆகும். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி.
தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்து வழிபட்டால் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும். மேலும், இந்த தீபாவளி தினத்தில்தான் சிவபெருமான், தன்னிடமிருந்த நிதி குவியல்களை குபேரனிடம் கொடுத்து, நிதிகளின் தலைவனாக பதவி ஏற்க செய்தது என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த குபேர பூஜை ,தீபாவளி அன்று மாலை வேளையில் செய்ய வேண்டும்.
மனை பலகையில், தாமரை கோலமிட்டு, வாழை இலையில் பச்சரிசியை போட்டு, அதன் மேல் சிவப்பு நிற பட்டு துணி கட்டிய கலசத்தை வைத்து கலசத்தின் இரு பக்கமும், சுபம் - லாபம் என எழுதி, வலம்புரி சங்குகள் இருந்தால், அதில் நீர் ஊற்றி வைத்து பின், மலர், சந்தனம், குங்குமம் மாவிலை கொத்தால் கலசத்தை அலங்கரிக்கவும்.
மேலும் அரிசியின் மேல் வைத்துள்ள கலசத்தை சுற்றி, நவரத்தினங்கள் மற்றும் நவதானியங்களை தொன்னையில் இட்டு வரிசையாக வைத்து பூஜை பொருட்களுடன் பிரசாதமாக, லட்டு, தேங்காய், பழம் மற்றும் தாம்பூலம் வைத்து, முதலில் விநாயகரை அருகம்புல்லால், 'ஓம் கணபதியே நம...' என்று, 11 முறை கூறி வழிபட வேண்டும்.
இதையடுத்து அன்றைய திதி, நாள், நட்சத்திரம் கூறி, 'குபேர பூஜாம் கரிஷ்யே' என, கூறுங்கள். பிறகு, 'ஓம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதாைஸ நம...' என்று சுற்றிலும் உள்ள நவதானியங்களில் மலர் இடுங்கள். மஞ்சள், அரிசி மற்றும் மலரை கையில் எடுத்து, 'கலச ரூபே ஓம் ஸ்வாகதம் ஸ்வாகதம் லக்ஷ்மி குபேராய நம...' என்று மூன்று முறை சொல்லி, கலசத்தின் மேல் போட்டு, மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.
அடுத்து, சிவபெருமானின் தோழனாக விளங்கும் தாங்கள் எனக்கு, பொன், பொருள் அருள வேண்டுகிறேன் என்று கூறி, புஷ்பாஞ்சலி செய்து, விழுந்து வணங்கி, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
இந்த பூஜையின் போது மூன்று பெண்களை அமர வைத்து, தாம்பூலம் மற்றும் பிரசாதங்களை கொடுங்கள். அவர்கள் சென்றதும், குபேரனது பிரசாதங்களை எடுத்து வைத்து, கலச நீரை, வீட்டின் எல்லா பகுதிகளிலும் தெளியுங்கள்.
தீபாவளி அன்று, குபேர பூஜையை செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், சிவ - விஷ்ணு கோவில்களில், லக்ஷ்மி தேவியை தரிசிக்கலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தீபாவளியை முன்னிட்டு நாளை 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி லக்ஷ தாமரை விதைகளால் ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகம், மஹா தன்வந்திரி ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமங்களுடன் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கும், ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கும், ஸ்ரீ தன்வந்திரி உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனை நடைபெற உள்ளது.
லக்ஷ்மி குபேர ஹோமம் மற்றும் அர்ச்சனை சிறப்பு
லக்ஷ்மி குபேர பூஜை என்பது ஸ்ரீ லக்ஷ்மி தேவியையும், ஸ்ரீ குபேரரையும் வேண்டி நடைபெறும் வழிபாடாகும். லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம், நம் இல்லத்தில் செல்வம் பெருகும், மேலும்நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது ஐதீகம்.
மஹா தன்வந்திரி ஹோமம்
இந்த ஹோமம் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் ஹோமம் ஆகும். இந்த மஹா தன்வந்திரி ஹோமம் செய்வதின் மூலம் உடல் நோய் மற்றும் மன நோய்கள் அகலும், நீண்ட ஆயுள் கிடைக்கும், மேலும் ஆரோக்யமான வழ்கையை அருளும்.
திருஷ்டி துர்கா ஹோமம்
திருஷ்டி துர்கா என்றால் திருஷ்டியால் ஏற்படக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்பவள் என்று பொருள். திருஷ்டி தோஷம் ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. கண் திருஷ்டியால் ஏற்ப்படும் தோஷங்கள் அகல நடைபெறும் ஹோமமே திருஷ்டி துர்கா ஹோமம் ஆகும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தீபாவளியன்று நடைபெறும் சிறப்பு ஹோமமங்களிலும் பூஜைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
அக்டோபர் 27ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் இரவு 8.14 மணிவரை லட்சுமி பூஜை செய்ய நல்ல நேரம். தீபாவளி நாளில் பூஜை செய்ய முடியாதவர்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும், மாலை, 5:00 மணி முதல் 7:00 மணி வரை, குபேர காலம் தான் எனவே அந்த நேரத்திலும் குபேர பூஜை செய்யலாம்.