ஆனந்தசரஸ் குளத்தில் நீராழி மண்டபத்தில் ஆனந்த சயனம் கொண்ட அத்திவரதர் - கொட்டிய மழை
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் 48 நாட்கள் தரிசனம் கொடுத்து விட்டு ஆனந்தசரஸ் குளத்தில் நீராழி மண்டபத்தில் ஜலசயனம் கொண்டுள்ளார்.
காஞ்சிபுரம்: ஸ்ரீ அத்திவரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு ஆனந்தசரஸ் தெப்பக்குளத்தில் நீராழி மண்டபத்தில் ஆனந்த சயனம் கொண்டுள்ளார். 16 கல் நாகங்கள் அத்திவரதருக்கு காவல் இருக்கின்றனர். 48 நாட்கள் அத்திவரதர் அருளாட்சி புரிந்து விட்டு சென்ற பின்னர் மக்களின் மனம் குளிர மழை கொட்டித் தீர்த்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். முதல் 31 நாட்கள், சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.
தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் திரண்டதால் காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டது. ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு ஆகம விதிப்படி, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் ஆனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்திவரதருக்கு 60 கிலோ மூலிகை தைலம் பூசப்பட்டது. அதன் பின்னர் 30 பட்டாச்சாரியார்கள் கோவிந்தா... கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு அத்திவரதரை சுமந்து சென்றனர். நள்ளிரவு 12.45 மணியளவில் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் சிலையை சயனநிலையில் வைத்தனர்.
தெப்பக்குளம் மகிமை
வரதராஜ பெருமாள் கோவிலில் 2 குளங்கள் உள்ளன. ஒன்று தாயாரின் பொற்றாமரை குளம். மற்றொன்று அத்திவரதர் வாசம் செய்யும் அனந்தசரஸ் குளம். அனந்தசரஸ் குளம் 24 அடி ஆழம் உடையது. 24 படிக்கட்டுகளையும் கொண்டது. 24 என்பதற்கும் முக்கியத்துவம் உண்டு. காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 அட்சரங்களை குறிக்கிறது. கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என 4 யுகங்களில் இந்த கலியுகத்தில் ஆதிசேஷன் வரதராஜ பெருமாளுக்கு தினமும் பூஜை செய்கிறார். எனவேதான் இந்த குளத்துக்கு ஆனந்தபுஷ்கரணி என்பர். இந்த குளம் நிறைய தண்ணீர் எப்போதும் நிறைந்து காணப்படும். குளத்தின் நடுவே பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், வராக தீர்த்தம் என்ற 3 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. இதில் தீர்த்தம் ஆட ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மோற்சவத்தின்போது வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்தி எழுந்தருள்வார்.
அத்திவரதருக்கு மூலிகை தைலம்
பெருமை மிகுந்த இந்த குளத்தில்தான் நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார் அத்திவரதர். 40 ஆண்டுகளுக்கு அத்திவரதர் சிலையில் எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக்காய், சாம்பிராணி, வெட்டிவேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை காய்ச்சி வடிகட்டி அந்த தைலம் அத்திவரதர் சிலை மீது பூசப்பட்டுள்ளது. அத்தி மரத்திலான சிலை என்பதனால் அதை தண்ணீருக்குள் வைக்கும்போது அடுத்த 40 ஆண்டுகள் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூலிகை தைலங்கள்
நீராழி மண்டபத்தில் தண்ணீருக்குள் சிலை இருக்கும்போது அதன் அருகே மீன், பாம்பு போன்றவையெல்லாம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அவை சிலை மீது உரசும்போது சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தைலங்கள் பூசப்படுவதால் மீன், பாம்பு போன்றவை சிலைக்கு அருகே செல்லாது என்பதற்காகவே மூலிகை தைலங்கள் பூசப்பட்டுள்ளன.
16 நாகர்கள் காவல்
சுவாமியின் தலைப்பகுதி மேற்கு திசையிலும் அதாவது விமானத்தை நோக்கியும், பாதம் கிழக்கு நோக்கியும் வைக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் கற்களால் ஆன 16 நாகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 48 நாட்களும் தினம் ஒரு பட்டாடையில் காட்சி அளித்த அத்திவரதர் நீராழி மண்டபத்தில் பட்டாடை அணிந்து ஜல சயனம் மேற்கொண்டுள்ளார்.
40 ஆண்டுகள் குளத்திற்குள் சயனம்
அத்திவரதரை சுற்றி இருக்கும் நாகர்கள் அவருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இனி 40 வருடங்களுக்கு பிறகு அதாவது 2059ஆம் ஆண்டு ஜலவாசத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வருவார். 48 நாட்களில் ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேரில் வந்து தரிசனம் செய்ய முடியாதவர்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்தனர். அவர் ஆனந்தசரஸ் குளத்திற்குள் இருந்தாலும் அடுத்த 40 ஆண்டுகளுமே அவர் நம்முடனேயே இருப்பார். உலகை சுபிட்சமாக வைத்து இருப்பார் என்று அவரது அருளை நேரில் தரிசித்த பக்தர்கள் கூறுகின்றனர்.
அத்திவரதரால் பெய்யும் மழை
அத்திவரதர் 1854ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு காட்சி தந்து வருவதாகத்தான் வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. ஆனால் 1389ஆம் ஆண்டு முதலே அத்தி வரதர் காட்சி தந்து கொண்டிருப்பதாக காஞ்சி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொருமுறையும் அத்தி வரதர் தரிசனம் முடிந்து மீண்டும் குளத்திற்குள் செல்லும் போதெல்லாம் நல்ல மழை பெய்திருக்கிறதாம். 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி முதல் ஆகஸ்டு 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், கடைசி நாள் இரவு அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே மழை கொட்டித் தீர்த்தது என காஞ்சியில் வசிக்கும் மூத்த குடிமக்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டும் அத்திவரதர் வைபவம் முடிந்து குளத்திற்குள் வைக்கப்பட்ட உடன் மழை நீரால் குளம் நிரம்பியது. இதனால் பக்தர்கள் அத்திவரதரின் கருணையை எண்ணி மகிழ்ந்தனர்.