நினைத்ததை நிறைவேற்றும் மச்சாவதார பெருமாள்
ஸ்ரீமத் நாராயணனின் முதல் அவதாரமான மச்சாவதாரம் இன்று மத்ஸ்ய ஜயந்தியாக கொண்டாடப்படுகிறது.
அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் முதல் அவதாரமான மத்ஸ்ய ஜயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. மச்சாவதாரப் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை
உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும்.
டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது. அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.
மச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)
பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்து வேதங்களை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில் முதல் அவதாரமாகும். பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரிணமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கிறது.
பகவான் விஷ்ணுவின் மச்சாவதாரம் சத்தியவிரதன் என்ற மன்னன் தருமவான். விஷ்ணு பக்தன். நாட்டு மக்களும் சத்தியமே பேசுமாறு ஆண்டு வந்ததால் சத்திய விரதன் என்ற பெயர் பெற்றான்.
தினமும் நதியில் நீராடி சந்தியாவந்தனம் செய்து அர்க்கியம் கொடுப்பது வழக்கம். ஒருநாள் காலை அவ்வாறு அர்க்கியம் தர இரு கைகளிலும் நீர் எடுக்க அதில் ஒரு மீன் இருந்தது. அதைத் தண்ணீரில் விடப் போக அது தன்னை மற்ற உயிரினங்கள் கொன்று விடும். எனவே அவற்றிடமிருந்து தன்னைக் காத்திடுமாறு வேண்டிக் கொள்ள அதை அவர் தன் கமண்டலத்தில் விட்டார். மறுநாள் காலை அது கமண்டலம் அளவு வளர்ந்து நிறைந்திருக்க அதனை ஒரு பெரிய கங்காளத்தில் இட அதையும் நிறைக்குமளவு வளர்ந்து விட்டது. எனவே அதை ஓர் ஏரியில் கொண்டு விட்டார் அங்கும் அது மிகப்பெரியதாகி ஏரியின் அளவு ஆகிவிட மிகவும் கஷ்டப்பட்டு அதைச் சமுத்திரத்தில் கொண்டுவிட்டார்.
அப்போது அது சத்தியவிரதனிடம் பேசிற்று. நான் நாராயணன். மச்சாவதாரம் எடுத்துள்ளேன். பக்தி, சிரத்தை, கருணையுடன் என்னைக் காப்பாற்றினீர். இன்னும் பதினைந்து நாட்களில் ஒரு பிரளயம் வரும் அனைத்து உயிர்களும் இறந்துவிடும். அப்போது நீ ஒரு பெரிய ஓடத்தில் ஒவ்வொரு உயிருக்கும் ஆன விதைகளைச் சேர்த்து அதில் ஏற்றிக்கொண்டு தயாராக இரு. உன்னுடன் சப்த ரிஷிகளும் ஓடத்தில் ஏறிக்கொள்வர். உங்கள் அனைவரையும் நான் கடலில் மூழ்கிப் போகாமல் பிரளயத்தில் இழுத்துச் சென்று பிரளயம் முடியும் வரையில் காத்திடுவேன் என்றது.
மன்னன் சத்தியவிரதன் அந்த நாளை எதிர்பார்த்து நின்றான். பிரளயத்தில் ஏற்பட்டு எங்கும் ஜலமயமாக, ஓடத்தில் ஏற்றப்பட்ட விதைகளும், சப்த ரிஷிகளும், சத்தியவிரதனும் பாதுகாப்பாக இருந்தனர். மச்சமாகிய பகவான் அவற்றைக் காத்து வந்தார். பிரளயம் முடிந்து உலகம் சகஜ நிலை அடைந்து பூபாகம் மேலெழச் சூரியன் தோன்றியது. பிரம்மா தன் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். ஆனால் அவர் பணியை அவரால் செய்ய இயலவில்லை. அதற்கான சக்தி சாமர்த்தியம் அவரிடம் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் வேதங்களைச் சோமகன் என்னும் அரக்கன் அபகரித்துச் சென்று சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டான். பிரம்மா நாராயணனைத் தியானம் செய்தார்.
நாராயணன் பிரம்மாவின் எதிரில் தோன்ற பிரம்மா அவரிடம் வேண்டினார், சோமகன் என்னும் அரக்கன் வேதங்களை அபகரித்துக் கொண்டு சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். வேதங்களின்றி என்னால் சிருஷ்டி காரியத்தை நடத்த இயலவில்லை. கருணாமூர்த்தி! வேதங்களை மீட்டுத் தந்தருள்வீராக என்றார்.
நாராயணன் ஒரு பெரிய சுறாமீன் வடிவில் மஹா மச்சாவாதரம் எடுத்து வேதங்களை மீட்க புறப்பட்டார். சோமகாசுரன் வேதங்களை விழுங்கி விட்டான். ஆனால், அவன் பசி தீரவில்லை. எனவே மேலும் ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்த அவன் முன் சுறாவடிவில் விஷ்ணு வர அது தனக்கேற்ற உணவென்று அதை விழுங்க வந்தான். இப்படி இருவருக்கும் பயங்கர போர் நடைபெற்றது.
மீன் தன் வாலால் நீரை அடிக்க நீர் மேலெழுந்தது. அத்துடன் அரக்கனும் மேல் எழுந்து விழுந்தான். மிகவும் கோபம் கொண்ட அரக்கன் தன் கைகளால் மீனை இரண்டாகக் கிழிக்க முயல, சுறாமீன் வடிவில் இருந்த விஷ்ணு அவனைப் பற்களால் குத்தி குதறி அவன் வயிற்றைக் கிழித்து வேதங்களையும், தக்ஷணாவர்த்த சங்குவையும் எடுத்துக் கொண்டு பிரம்மாவின் முன் தோன்றி வேதங்களை அளித்தார். சங்கைத் தான் தரித்தார். மேலும் அரக்கன் விழுங்கியதால் வேதங்களில் சில பகுதி காணப்படவில்லை. அவற்றை ஞாபகப்படுத்தி பூர்த்தி செய்க என்று பிரம்மாவிடம் கூறி மறைந்துவிட்டார்.
ஜோதிடர்கள்
வேதத்தை மறைஎன்றும் கூறுவார்கள். எனவேதான் வேதத்திற்க்கும் மீன ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கால புருஷ ராசியில் பன்னிரெண்டாமிடமாகிய மறைவு ஸ்தானத்தை குறிக்கும் மீன லக்ன ராசி காரர்கள் வேதத்திலோ அல்லது வேதத்தின் கண்கள் என போற்றப்படும் ஜோதிடத்திலோ சிறந்து விளங்குவார்கள்.
மீனராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரன் 4ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக்கொண்டே தானிருக்கும்.
குரு பகவான்
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம்அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம்பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனைகூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும்இருப்பார்கள். பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும்
மீன ராசி
மீனராசி மற்றும் லக்னம் குருவின் ஆதிக்கம்பெற்ற ராசியாகும். வேதம் ஓதும் ஆந்தனர்கள் சாஸ்திர பண்டிதர்கள்,வேதியர்கள், அர்சகர்கள், ஆசிரியர்கள் ஜோதிடர்கள் இவர்களுக்கெல்லாம் காரக கிரகம் குரு பகவான் ஆகும். மீன் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நீர்வாழ் உயிரினமாகும். அத்தகைய மீன ராசியில் சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் இன்று மச்சாவதார மூர்த்தியான மத்ஸ்ய ஜெயந்தியாகும். தற்போது மீன்களின் இனபெருக்க காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேத நாராயண பெருமாள்
இந்த மத்ஸ்ய ஜெயந்தி நாளில் வேதம் ஓதும் வேதியர்கள், அந்தணர்கள், ஜோதிடர்கள் ஆசிரியர்கள் மற்றும் மீனவர்கள் மீனை உண்பவர்கள்அனைவரும் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயண பெருமாளை வணங்க அவர்கள் தொழிலினால் அவர்களுக்கு ஏற்பட்ட சாபங்களும் தோஷங்களும் நீங்கி உயர்வு ஏற்படும்.