வைகாசி விசாகம்: நெருப்பில் அவதரித்த அழகன் முருகன்
மனிதர்கள் பிறந்தநாளையே உற்சாகமாக கொண்டாடும் போது தமிழ் கடவுள் முருகன் பிறந்தநாளை மக்கள் எப்படி கொண்டாடாமல் இருப்பார்கள்.
சென்னை: சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.
வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர். தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.
நெருப்பில் உதித்த முருகன்
சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தை களையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.
ஆறுமுகன் பெயர்கள்
முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் சரவணபவன் என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பால்குடம் காவடி
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
கந்த சஷ்டி கவசம்
விசாக நன்னாளில் பக்தர்கள் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவ, நம ஓம் முருகா என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். வைகாசி விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
பகை விலகும்
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.