சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்யும் முருகன்- முகத்தில் துளிர்க்கும் வியர்வை
சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவான நேற்று சிக்கல் சிங்காரவேலர்
நாகப்பட்டினம்: கந்த சஷ்டி விழா முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் நடைபெறுகிறது. உலகமெங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கந்தசஷ்டி நடைபெற்றாலும் திருச்செந்தூரில்தான் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும். உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் இந்த நிகழ்வை காண கூடுவார்கள். சூரனை வேல் கொண்டு சம்ஹாரம் செய்யும் முருகன், தனது அன்னையிடம் வெற்றி வேலினை வாங்குவார். இந்த நிகழ்ச்சி கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளன்று நடைபெறும். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது அழகன் முருகனுக்கு முகத்தில் பெருகிய வியர்வை துளிகளை அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முருகனின் முகத்தில் ஏன் வியர்வை பெறுகிறது தெரியுமா? தீய சக்திகளை நான் வியர்வை துளிகளைப் போல துடைத்து எறிவேன் எனவே பக்தர்களே தீயவைகளைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று உணர்த்தும் வகையிலேயே கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்வை ஆறாக பெருகுகிறதாம்.
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. இந்த வேல் பிறந்த கதையையும் கந்த சஷ்டியின் கதையையும் படித்தாலோ, கேட்டாலோ எண்ணற்ற நன்மைகள் நிகழும் என்பது நம்பிக்கை.
சாகா வரம் பெற்ற அசுரர்கள்
காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர்.
காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர்.
மரணம் வரும் வழி
சிவனிடம் இருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்ற சூரபத்மன், தனக்கு சாகாவரம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். அதற்கு சிவனோ, இந்த பூவுலகில் பிறந்தவர்கள் ஒருநாள் மடிந்தே தீர வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில் எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக்கேள் அந்த வரம் தருகிறேன் என்றார் சிவன். உடனே சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டான்.
பெண்ணின் கருவில் பிறக்காத குழந்தை
பெண்ணில் கருவில் பிறக்காத குழந்தை இருக்குமா? அந்த சிவனுக்கே செக் வைத்து விட்டோம் என்ற மமதையில் சூரபத்மனின் ஆட்டம் அதிகமானது.
தனது சகோதரர்களுடன் தேவர்களுடன் போரிட்டான் அவனுக்கு குலகுருவான சுக்ராச்சாரியரின் ஆசியும் இருந்தது. இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான் இந்திரன். உடன் சூரபத்மன் இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான்.
அக்னியில் உருவான முருகன்
சூரபத்மன் ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர். தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி தன நெற்றிக் கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு அக்னி பொறி எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருவாயின.
பார்வதி மைந்தன்
அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர்.
சிவசக்தியின் அம்சமான வேல்
சிவபெருமான் முருகனை அழைத்து, சூரர்களை வென்று தேவர்களை காப்பாய் என்று ஆணையிட்டார். அதன் பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு பார்வதியிடம் "முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக" என்றார். பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது.
சிக்கலில் வேல் வாங்கும் முருகன்
அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் இன்றைக்கும் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது பழமொழி. நேற்றைய தினம் கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் சிக்கலில் பார்வதி தேவியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிக்கலில் வேல் வாங்கும்போது முருகன் திருமேனியில் வியர்த்தது. இதனைப் பார்த்து பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் சம்ஹாரம்
முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான். சஷ்டி நாளில் ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் ஆண்ட சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். சேவலும் மயிலுமாக ஆக்கி, தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டு, அவனுக்கும் கௌரவம் அளித்தார்.
சிவபூஜை செய்த முருகன்
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்து தனது தோஷம் கழிக்க நினைத்தார். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச்செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கம் உள்ளது. சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம்மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தார். திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நடந்தாலும் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் முருகன்- தெய்வானை திருமணம் நடைபெறுகிறது. திருச்செந்தூரிலும் இன்று சூரசம்ஹாரம் முடிந்து நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஆறுநாள் விரதமிருந்த பக்தர்கள் இன்று சூரசம்ஹாரம் முடிந்து விரதம் முடிக்கின்றனர். நாளை திருக்கல்யாணம் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள்.