சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் : சிதம்பரத்தில் நடராஜரின் அற்புத தரிசனம் கண்ட பக்தர்கள்
சிதம்பரம்: கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சிவாலயம் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில். பரதம் என்னும் நாட்டியக் கலையை தோற்றுவித்த நாயகரான நடராஜர் நாட்டியமாடும் கோலத்தில் இருக்கும் தலம். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. பூலோக கைலாயம் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் பஞ்ச சபைகள் என போற்றப்படுபவை சிதம்பரம் கனகசபை, திருவாலங்காடு ரத்தினசபை, மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிரசபை, திருக்குற்றாலம் சித்திரசபை. இங்கெல்லாம் சிவபெருமான் பலவகை நடனங்களை ஆடியுள்ளார். திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவத்தையும் அவிநாசியி ஊர்த்தவ தாண்டவத்தையும், மதுரையில் சுந்தர தாண்டவத்தையும் திருவாரூரில் அஜபா தாண்டவத்தை தில்லையில் ஆனந்த தாண்டவத்தையும் பக்தர்கள் கண்டு தரிசிக்கலாம். திருநெல்வேலியில் காளிகா தாண்டவம், திருப்பத்தூரில் கவுரிதாண்டவம், குற்றாலத்தில் திரிபுரதாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவம் ஆடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவபெருமான் தேவர்களுக்காக 42, முருகனுக்காக 3, திருமாலுடன் 9, அம்பிகையுடன் 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ் பெற்றவை.
மார்கழி மாதத்தில் நடராஜ பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவார்கள் என்பது ஐதீகம். மேலும் மார்கழி மாத திருவாதிரை உற்சவம் விழா அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிதம்பரத்தில் தேரோட்டம்
பொற்சபையான சிதம்பரத்தில் இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா மற்றும் பிச்சாண்டவர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. 9ஆம் தேதி காலை தேரோட்டம் நடந்தது. விநாயகர், முருகன், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப் பட்ட தனித்தனி தேர்களில் வைக்கப்பட்டு நான்கு மாட வீதிகளையும் வலம் வந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நடராஜரின் தரிசனம்
நள்ளிரவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு, லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆருத்ரா தரிசனம் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதராக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நடராஜருக்கு அபிஷேகம்
உத்தரகோசமங்கையில் நேற்று காலை நடராஜருக்கு சாத்தப்பட்டு இருந்த சந்தன காப்பு களையப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். நடராஜருக்கு 32 வித அபிஷேகங்கள் செய்யப்பட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
உலா வந்த நடராஜர்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கற்பகவல்லி தயார் பொன்னூஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று அதிகாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆருத்ரா தரிசன காட்சியும் நடைபெற்றது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவின் முக்கிய அம்சமாக
நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.