சிவபெருமானின் பஞ்ச சபை நடனம் - மதுரையில் கால் மாற்றி ஆடிய நடராஜர் காரணம் தெரியுமா?
நடராஜரின் ஐந்து நடனசபைகளில் மதுரையில் மட்டும் நடராஜர் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடுகிறார்.
சிதம்பரம்: பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, சித்திரசபை,ரத்தினசபை என நடராஜன் பஞ்சபைகளில் திருநடனம் ஆடுகிறார். நான்கு சபைகளிலும் இடதுகாலை தூக்கி நடனம் ஆடும் சிவன், மதுரையில் வெள்ளியம்பலத்தில் மட்டும் சிவன் வலதுகாலை
தூக்கி நடனமாடுகிறார். இது ஏன் என்று பக்தர்களுக்கு தெரியுமா? ஆடல்வல்லன் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறும் இந்த நேரத்தில் அதைப் பற்றி அறிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.
நடராஜர் ஐந்து நடன சபைகளில் ஆடும் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும். நடராஜப் பெருமான் இவ்வாறு ஆடிக்கொண்டே இருப்பதால் தான் உலகத்தின் இயக்கம் இயற்கையை ஒட்டி இயல்பாக இருக்கிறது. சிதம்பரத்தில் பொன்னம்பல சபையில் இவர் ஆனந்தத்தாண்டவம் ஆடி பக்தர்களை மகிழ்விக்கிறார். திருநெல்வேலியில் தாமிரசபையில் ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திரசபையில் நடராஜர் ஆடுவது திரிபுரதாண்டவம். திருவாலங்காட்டில் ரத்தினசபையில் ஆடுவது காளிதாண்டவம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெள்ளியம்பலத்தில் அவர் ஆடுவது சந்தியா தாண்டவம். ஐந்து நடனசபைகளில் மதுரையில் மட்டும் ஏன் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனமாடுகிறார் என்பது ஒரு சுவராஸ்யமான கதை உள்ளது.
மதுரையில் மீனாட்சி, சுந்தரேசுவரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர். தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர்.
கால்மாற்றி ஆடும் நடராஜர்
நடராஜர் அனைத்து சிவ ஆலயங்களிலும் இடதுகாலை தூக்கி ஆனந்த நடனம் ஆடுகிறார். ஆனால் மதுரையில் மட்டும் அவர் வலதுகாலைத் தூக்கி களிநடனம் புரிகிறார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வெள்ளியம்பலத்தில் பக்தர்கள் இந்த தரிசனத்தைக் காணலாம். தனது பக்தருக்காகவே அவர் காலை மாற்றி ஆடினார்.
இறைவன் நடனம்
பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை உரைத்தது.
பக்தனின் வேண்டுகோள்
பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்? என நினைத்தவன் நேராக நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.
பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!" என வேண்டினான். இறைவன், மன்னனை மேலும் சோதிக்கும் விதமாக சலனமின்றி நின்றிருந்தான். அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால், என் முன்னால் ஒரு கத்தியை நட்டுவைத்து அதன்மீது விழுந்து உயிர் துறப்பேன்,' என்று மிரட்டலாய் மன்றாடினான் மன்னன்.
மதுரை மீனாட்சி கோவில் நடராஜர்
சற்றே கண்மூடி மீண்டும் திறந்தபோது அப்படியே மெய்சிலிர்த்துப் போனான். ஆமாம், பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருந்தார் நடராஜப்பெருமான்! எனக்காகக் கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும், என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டான் மன்னன். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார்
சந்தியாதாண்டவம்
இன்றைக்கும் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. நடராஜரின் கால் மாறி ஆடிய இந்த சந்தியா தாண்டவம் பற்றி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்பு பட்டயத்தில் குறிப்பு காணப்படுகிறது. இந்த ஆருத்ரா தரிசன நாளில் சிவனின் பஞ்சபைகளில் ஏதாவது ஒரு சபைக்கு சென்று நடராஜனின் நடனத்தை கண்டு தரிசனம் செய்யுங்கள்.