திரைப்படத்துறையில் பல புதுமைகளை ஏற்படுத்தப்போகும் சுக்கிரவார முழு சந்திரகிரஹணம்!
Recommended Video
சென்னை: இன்று (27/7/2018) வெள்ளிக்கிழமை விளம்பி வருஷத்தின் இந்தியாவில் தெரியக்கூடிய முதல் பூர்ண சந்திர கிரஹணம் என பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கி|றது. உத்திராடம், திருவோணம் நக்ஷத்திரங்களில் நிகழும் கேது க்ரஹஸ்த முழு சந்திர கிரஹணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரஹனம்:
சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.
கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.
பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.
கிரஹண காலம்:
கிரஹண ஆரம்ப காலம் - 27-7-2018 11.53 PM
கிரஹண உச்சம் - 28-7-2018 01.51 AM
கிரஹண மோக்ஷம் - 28-7-2018 02.43 AM
தர்ப்பணம் செய்ய வேண்டிய நேரம் 02 43 AM To 03 49 AM
கிரஹண காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள்:
கிரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குள் சாப்பாடு முடித்துக்கொள்ள வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், கர்பினிப்பெண்கள், நோயாளிகள் போன்றவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. என்றாலும் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் நோயுற்றவர்களும் கிரஹணம் விட்ட பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும். கிரஹண காலத்தில் கர்பினி பெண்கள் வீட்டினுள் கிரஹன கதிர்கள் படாத இடத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மேலும் கிரஹன காலத்தில் எந்த ஒரு பொருளையும் கர்பினிப்பெண்கள் கிள்ளக்கூடாது. அவ்வாறு கிள்ளினால் குழந்தை உடல் உறுப்பில் ஏதாவது ஒரு குறை அதாவது பின்னமாக அமைந்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் உணவு பொருட்களில் கிரஹன கதிர்கள் தாக்காவண்ணம் தர்ப்பையை வீட்டில் இருக்கும் நீர், தயிர், தோசை மாவு, ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும் கர்ப்பிணிஸ்திரிகள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரை சந்திரனை பார்க்க கூடாது. பெளர்ணமி திதி ச்ரார்த்தம் மறு நாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.
கிரஹன தோஷம் நீங்க சாந்தி செய்ய வேண்டிய நக்ஷத்திரங்கள்:
பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்ராடம், திருவோணம், ரோஹிணி, ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும் மறு நாள் சனிக்கிழமை சாந்தி செய்துகொள்ளவும்.
கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். அனைவரும் கிரகண நேரத்தில் ஜபம் செய்வது நல்லது. 1000 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது. நதி ஸ்நானம், ஸமுத்ரஸ்நானம், தடாகஸ்நானம் என்பன மிகமிக விசேஷம்.
சந்திர கிரஹண பரிஹார ஸ்லோகம்:
யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
ஜோதிடமும் கிரஹணமும்:
வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது.
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும். எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர்.
திடீர் அரசியல் மாற்றம் ஏற்படுத்தபோகும் கிரஹணம்:
இன்றைய சந்திர கிரஹனத்தின்போது கால புருஷனின் லக்னமான மேஷ லக்னத்தில் ஆரம்பித்து மிதுன லக்னத்தில் முடிவடைகிறது. சூரியன் கால புருஷனுக்கு நான்காம் வீடான கடகத்தில் ராகு மற்றும் வக்ர புதனோடு சேர்ந்து நிற்க்கும் நிலையில் சந்திரன் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமென்னும் மகரத்தில் கேது மற்றும் வக்கிர செவ்வாயோடு சேர்ந்து நிற்க்கும் நிலையில் கிரஹணம் நிகழ்கிறது.
பொதுவாக கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்க்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என ப்ரஹத் சம்ஹிதை மற்றும் முண்டேன் அஸ்ட்ராலஜி நூல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் மாற்றத்திற்க்கு முக்கிய காரக கிரஹங்கள் ராகு-கேதுவாகும். இந்த முழு சந்திர கிரஹன காலத்தில் சூரியன் சந்திரன் ராகு-கேதுகளின் பிடியில் பலமிழந்து நிற்கிறது. மேலும் அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர்.
தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்நிலையில் சந்திர கிரஹனம் அரசியலை குறிக்கும் மேஷத்தில் ஆரம்பிப்பதும் அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றை குறிக்கும் சூரியன் ஆடி மாதம் பிறந்ததில் இருந்து தனது ராசிக்கு பன்னிரெண்டில் கடகத்தில் மறைந்து பலமிழந்து நிற்பதும் சந்திரன் மகரத்தில் நிற்பதும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
முக்கியமாக கூர்ம சக்கரத்தின் படி திருவோண நக்ஷத்திரத்தில் ஏற்படும் சந்திர கிரஹணம் இந்தியாவின் வட மேற்கு எல்லை நாடுகளான பாகிஸ்த்தான், ஆப்கானிஸ்தான் இருந்து அச்சுறுத்தல் மற்றும் வடமேற்க்கு மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு-காஷ்மிர் போன்ற பகுதிகளில் அடுத்த ஆறு மாத காலத்தில் அரசியல் மாற்றங்கள், இயற்க்கை சீற்றம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.
கிரஹண ஆரம்ப கால லக்னாதிபதி செவ்வாய் வக்ரம் மற்றும் உச்சம் பெற்றும் மற்றொரு வக்ரம் பெற்ற கிரஹமான புதனை பார்க்கும் நிலையில் ராகு-கேது அச்சில் நிற்பது பூமி சம்மந்தமான மற்றும் பத்திர பதிவு ஊழல்கள் வெளிவருவது, நில நடுக்கம், வியாபார ஸ்தலங்களில் திடீர் தீ விபத்து போன்ற உற்பாதங்கள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பல புரட்சியாளர்கள் தோன்றி யுத்தம் ஏற்படவும் வாய்பிருக்கிறது.
வெள்ளிக்கிழமையும் பெளர்ணமியும் இணைந்த நாளில் ஏற்படும் சந்திர கிரஹணம் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், சுமங்கலிகள் போன்றவர்களுக்கும் வங்கி சார்ந்த நிறுவனங்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் சில தேவையற்ற பிரச்சனைகள் மற்றும் அவப்பெயர் ஏற்படும். என்றாலும் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று லக்னங்களில் கிரஹணங்கள் நிகழ்வதால் சினிமா, தகவல் தொடர்பு, விளம்பரங்கள், மீடியா போன்ற துறைகளில் பல புதிய யுக்திகள் கையாளப்பட்டு திடீர் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கலாம்.
கிரஹண நேரத்தில் திருமணம் ஆகாத பெண்களும், சுமங்கலி பெண்களும் வீட்டில் விளக்கேற்றி பாற்கடலில் உதித்த அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மியை மஹாலக்ஷ்மி அஷ்டகம், மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் போன்ற ஸ்லோகங்களை கூறி வணங்கிவர அவர்களின் தோஷங்கள் குறையும். மேலும் திருமணமாகாதவர்களுக்கு திடீரென வரன் அமையும். வேத அந்தனர்கள் ஸ்ரீ ஸூக்த ஜெபம் செய்வது உலக நன்மைக்கு மிகவும் ஏற்றதாகும்.
கோவில் நடை சாத்தப்படுகிறது:
கிரகணத்தின் போது விரதம் இருப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கிரகணத்தின்போது கருவுற்ற பெண்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். முக்கியமாக அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோவில்களை கழுவி சுத்தம் செய்வார்கள். சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் நடைகள் சாத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு கோவில் முன்பாக போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சந்திர கிரணம் முடிந்தவுடன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
9498098786