மருத்துவத்துறையில் மகத்துவம் நிகழ்த்தபோகும் முழு சந்திர கிரஹனம்.
Recommended Video
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும்.
நீல சந்திர கிரஹனம்:
ஒரு மாதத்தில் ஒரேயொரு முறை மட்டுமே, பௌர்ணமி நாளில், முழு நிலவை பார்க்கலாம். அதுவும் ஒவ்வொரு 29 நாட்களுக்கு ஒரு முறைதான் பௌர்ணமி வருகிறது. ஆனால், கடந்த ஜனவரி 1ஆம் தேதி பௌர்ணமி என்பதால் முழு நிலவு தோன்றியது. இதே மாதத்திலேயே 31ம் தேதி இன்று இரண்டாவது முறையும் பௌர்ணமி வருகிறது. இவ்வாறு ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவுக்குத்தான் ‘ப்ளூ மூன்' என்று பெயர். இந்த நிகழ்வின் போது நிலவு 15% கூடுதல் பிரகாசமாக இருக்கும்.
சந்திர கிரஹனம்:
கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.
பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகதியில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.
கிரஹண காலம்:
கிரஹண ஆரம்ப காலம் மாலை 5:17
கிரஹண உச்சம் இரவு 7:59
கிரஹண மோக்ஷம் அதாவது கிரஹண முடிவுக்காலம் இரவு 8:41
தர்ப்பணம் பண்ண வேண்டிய நேரம் இரவு 8:40 க்கு மேல்
கிரஹண காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நியமங்கள்:
கிரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும். இன்று புதன் கிழமை பகல் போஜனம் செய்யக்கூடாது. அதாவது காலை 11.00 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், கர்பினிப்பெண்கள், நோயாளிகள் போன்றவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. என்றாலும் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் நோயுற்றவர்களும் கிரஹணம் விட்ட பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும். கிரஹண காலத்தில் கர்பினி பெண்கள் வீட்டினுள் கிரஹன கதிர்கள் படாத இடத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மேலும் கிரஹன காலத்தில் எந்த ஒரு பொருளையும் கர்பினிப்பெண்கள் கிள்ளக்கூடாது. அவ்வாறு கிள்ளினால் குழந்தை உடல் உறுப்பில் ஏதாவது ஒரு குறை அதாவது பின்னமாக அமைந்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் உணவு பொருட்களில் கிரஹன கதிர்கள் தாக்காவண்ணம் தர்பையை போட்டுவைப்பதும் மரபு.
கிரஹன தோஷம் நீங்க சாந்தி செய்ய வேண்டிய நக்ஷத்திரங்கள்:
சாந்தி செய்யக்கூடிய நட்சத்திரகாரர்கள் - புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி
அனைவரும் கிரகண நேரத்தில் ஜபம் செய்வது நல்லது. 1000 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது.நதி ஸ்நானம், ஸமுத்ரஸ்நானம், தடாகஸ்நானம் என்பன மிகமிக விசேஷம்.
சந்திர கிரஹண பரிஹார ஸ்லோகம்:
யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
ஜோதிடமும் கிரஹணமும்:
வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானிவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது.
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும். எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர். அதை தொடர்ந்து இன்று ஏற்படும் சந்திர கிரஹணத்தில் அனைத்து வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின்படி சூரியன் கேதுவோடு மகர ராசியிலும் சந்திரன் ராகுவோடு கடகத்திலும் இணைவு பெறுகின்றனர்.
திடீர் அரசியல் மாற்றம் ஏற்படுத்தபோகும் கிரஹணங்கள்:
இன்றைய சந்திர கிரஹனத்தின்போது கால புருஷனின் நான்காவது ராசி மற்றும் சந்திரனின் ஆட்சி வீடான கடக லக்னத்தில் ஆரம்பித்து சிம்ம லக்னத்தில் முடிவடைகிறது. மேலும் சந்திரன் கடகத்திலும் சூரியன் காலபுருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் நிற்கின்றனர். கடகமும் சிம்மமும் ராஜ கிரஹங்கள் எனப்படும் சூரியன் மற்றும் சந்திரனின் ஆட்சி வீடுகளாகும். பொதுவாக கிரஹணங்கள் ஏற்படுவது ராஜாங்க விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்க்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என ப்ரஹத் சம்ஹிதை மற்றும் முண்டேன் அஸ்ட்ராலஜி நூல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்நிலையில் சந்திர கிரஹனம் சூரிய சந்திர ராசிகளையே லக்னமாக பெற்று அமைந்திருப்பது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் கடக ராகுவின் திரிகோண பார்வையோடு கிரஹணம் ஏற்படுவதால் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவை அதிக அளவில் ஏற்படும். காவல் துறையும் சட்டமும் செயலிழந்த நிலையில் இருக்கும். அதே நேரத்தில் மருத்துவத்துறையில் பல புதுமைகள் ஏற்பட வழி வகுக்கும்.
கடகத்தில் சந்திரன் ராகுவோடு இணைவு பெற்ற நிலையில் சூரியன் புதன், சுக்கிரன் மற்றும் கேதுவின் இணைவு பெற்று சம சப்தம பார்வை பெறுவது பெண்கள் ஒழுக்கம் மற்றும் கற்பு நிலை பாதிக்கும் நிலை ஏற்படும்.
கோவில் நடை சாத்தப்படுகிறது:
கிரகணத்தின் போது விரதம் இருப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கிரகணத்தின்போது கருவுற்ற பெண்களை வெளியே அனுப்ப மாட்டார்கள். முக்கியமாக அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோவில்களை கழுவி சுத்தம் செய்வார்கள். சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் நடைகள் சாத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு கோவில் முன்பாக போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சந்திர கிரணம் முடிந்தவுடன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.