சந்திர கிரகண நாளில் கர்ப்பிணிகள் நகம், காய்கறி வெட்டக்கூடாதா?
இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது. கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது என்று பெரியோர்கள் கூற
சென்னை: சந்திரகிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் எந்த வேலையும் செய்யக் கூடாது, அவர்கள் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. ஜூலை 27 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நாளில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் தெய்வ சிந்தனையுடன் இருந்தால் குறையில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள்.
முக்கியமாக கர்ப்பிணி பெண்களை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது, சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நீண்ட சந்திர கிரகணம்
இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது. அன்றைய தினத்தில் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ரெட் மூன் என அழைக்கப்படுகிறது.
கேது சந்திர கிரகணம்
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். இது கேது உடன் சந்திரன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது.
இந்தியாவில் தெரியும்
சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி. சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி. இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.கிரகணம் ஏற்படும் நாள் ஆடி பௌர்ணமி என்பதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தர்ப்பை புல் எதற்காக
கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. எனவேதான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
ஆலய தரிசனம்
கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு குளித்து விட்மு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே சாப்பிட வேண்டும்.
தாம்பத்ய உறவு கூடாது
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.
கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏன்?
கிரகண காலத்திற்கென சில நியதிகள் சாஸ்திரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தைப் பார்க்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மேலும், கிரகண நேரத்தின் போது வெளியே சென்றால் கதிர்வீச்சுக்களினால் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்புகள ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
நகம் வெட்டக்கூடாதா?
கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது என்றும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த பாதிப்பை `கிரகணமூலி' என்றும் சொல்கிறார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கர்ப்பிணிகள் பத்திரமாக இருப்பது நல்லது.
கதிர்வீச்சு பாதிப்பு
எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கிரகணம் நிகழும் நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் செயற்கையான இருட்டு ஏற்படுகிறது. இதன் காரணமாக பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பிணிப் பெண்கள், இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாம்பு கிரகங்களுடன் சந்திரன்
கிரகண நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் போது சந்திரனின் நேர்மறைக் கதிர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.இதேபோல் கிரகணங்களில் பிறப்பவர்கள் ஜோதிட ரீதியாக சில சிரமங்களைச் சந்திக்க வேண்டி வரும். இது ஒவ்வொரு ராசி/லக்னத்திற்கும் வேறுபடும். ஏனெனில் கிரகண நேரத்தில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் சூரியன்/சந்திரன், சாயா கிரகங்களான ராகு/கேதுவுடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்றே ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.