செவ்வாய் உடன் இணையும் சந்திரன்... கூடவே கேதுவும் - சந்திர கிரகணம் பாதிப்பு வருமா?
ஆடி மாதம் நிகழ உள்ள சந்திர, சூரிய கிரகணத்தால் பெரு வெள்ளமும், காடுகளில் தீ விபத்தும் ஏற்படும் என பஞ்சாங்கம் எச்சரிக்கிறது.
சென்னை: ஆடி மாதம் 11ஆம் தேதியன்று மிக நீண்ட சந்திர கிரகணமும், ஆடி 26ஆம் தேதி சூரிய கிரகணமும் நிகழ உள்ளது. இந்த சந்திர சூரிய கிரகணத்தால் தீ விபத்துகள் ஏற்படும் என்றும், பெரு வெள்ளம் ஏற்படும் என்றும் விளம்பி வருட பஞ்சாங்கம் எச்சரிக்கிறது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஜூலை 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அடுத்தடுத்து சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்பட உள்ளது.
ஜூலை 27ஆம் தேதியன்று தொடங்கி 28 ஆம் தேதி 2 மணிவரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்ததை விட இந்த சந்திர கிரகணம், 1 மணி 43 நிமிடங்கள் நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாங்கம் கணிப்பு
மகரம் ராசியில் செவ்வாய் உச்சத்தில் இருக்கிறார் கூடவே ஞானகாரகன் கேதுவும் கூட்டணியில் இருக்க 27ஆம் தேதியன்று சந்திரனும் இணையப்போகிறார். இது கேது கிரகத்துடன் இணைந்த சந்திர கிரகணத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஆடி மாதத்தில் சூரியன், சந்திரன் என இரண்டு கிரகணங்கள் ஏற்படுவதால் கிரகணம் தெரியும் நாடுகளில் பாதிப்பு வரும் என்று கணித்துள்ளது.
தீ விபத்துகளால் பாதிப்பு
ஆடி மாதம் 26ஆம் தேதியன்று ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சனிக்கிழமை ஆயில்யம் நட்சத்திரத்தில் பகல் 1.32 மணி முதல் மாலை 5 மணிவரை நிகழும் ராகு கிரஹஸ்த பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் இந்த கிரகணம் தெரியும் நாடுகளில் தீ விபத்துக்களும், வெள்ளமும் ஏற்படும் என்று கணித்துள்ளது பஞ்சாங்கம். சிவகாசியில் பட்டாசு விபத்துக்களினால் உயிரிழப்பும் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
சந்திர மங்கள யோகம்
சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது, சந்திர மங்கள யோகம் எனப்படும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருப்பர். சந்திரன்- கேது சேர்க்கை கொண்டவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அதைச் சரியானபடி பயன்படுத்த மாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. இவர்களுக்கு எல்லாவிதமான மந்திரங்களும் சித்தியாகும்.
கிரகண தோஷம்
ஒருவர் சூரிய கிரகணத்தில் பிறந்திருந்திருந்தால் அவரது ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருக்கும். அதுவே சந்திர கிரகணத்தில் பிறந்திருந்தால் சந்திரனுடன் ராகு/கேது சேர்ந்திருக்கும். சூரிய கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு உள்ள சூரியன்+ராகு/கேது சேர்க்கையை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலோ, அந்த சேர்க்கையுடன் சனி அல்லது செவ்வாய் இணைந்தாலோ அந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். இம்முறை சந்திர கிரகணத்தில் கேது செவ்வாய் சந்திரன் இணைகிறது. சூரிய கிரகண தினத்தில் சூரியனுடன் ராகு, சந்திரன், இணைந்துள்ளது.