மதுரை ஆவணி மூலத்திருவிழா 2019: மீனாட்சி ஆட்சி முடிந்து சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்குது
Recommended Video
மதுரை: சித்திரையில் தொடங்கிய மதுரை மீனாட்சி அன்னையின் ஆட்சி ஆவணி மாதத்துடன் முடிவடைகிறது செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி முடிந்து சொக்கநாதர் ஆட்சி நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி வரை திருவிழாக்கள் களைகட்டும். சித்திரை திருவிழா, வைகாசி வசந்தோற்சவம், ஆடி முளைக்கொட்டு விழா என களைகட்டியது. ஆவணி மாதம் மூலம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிவபொருமான் நிகழ்த்தும் திருவிளையாடல்களை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வகையிலும் மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவிழா போலவே ஆவணி மூலம் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.
கொடியேற்றம்
நாள் காலை 7.35 மணிக்கு மேல், சுவாமி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் பட்டர்களால் கொடியேற்றப்பட்டு கோலாகலமாக துவங்கப் பட உள்ளது. கொடியேற்றத்துக்கு பின் தீபாராதனை நடைபெறும். மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
நரியை பரியாக்கிய சிவன்
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை லீலைகள் நடைபெறும் கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம் அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அருளுதல், உலவாக்கோட்டை அருளியது. பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்ற லீலை என நடைபெறுகிறது முக்கிய லீலைகளான நரியை பரியாக்கியது. பிட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலை நடைபெறுகிறது.
சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
செப்டம்பர் 7ம் தேதி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி முடிவுக்கு வந்து சிவபெருமானின் ஆட்சி தொடங்குகிறது. சித்திரை மாதம் வரை மதுரையை சுந்தரேஸ்வரர் ஆட்சி செய்வார்.
கோவில் நடை அடைப்பு
செப்டம்பர் 9ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்புக்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மட்டும் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று, ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்வையிட்டு தரிசிக்கலாம்.
இரவு 9.30 மணியளவில் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருள்வர்.
திருவிழா நிறைவு
செப்டம்பர் 11 ஆம் தேதி சட்டத்தேர் எழுந்தருளல் நடைபெறும், 12ஆம் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் ஆவணி மூலம் திருவிழா நிறைவடைகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரரை காண மதுரைக்கு வாங்க மக்களே.