அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் - கோவிந்தா முழக்கத்துடன் தரிசித்த பக்தர்கள்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
மதுரை: அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு இறைவனை தரிசனம் செய்தனர்.
மதுரை அருகேயுள்ள அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் 108 வைணவ தலங்களில் முக்கியமானது. மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவும், ஆடி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழாவும் பிரச்சித்தி பெற்றது.
வருடந்தோறும் ஆடிப்பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலையில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிம்மம், அன்னம், அனுமார், சேஷ, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலையில் பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 6.20 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துடன் தேரோட்டம் தொடங்கியது.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., கோவில் தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, ஜமீன்தார் சண்முக ராஜபாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்களை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவள்ளி முன் செல்ல சாமியாட்டத்துடன் உடன் சென்ற பக்தர்களின் கோவிந்தா கோஷம்முழங்க பக்தி பரவசத்துடன் சென்றனர். பின்னர் நாட்டார்கள் திருத்தேரில் நான்கு திசைகளிலும் இருந்து வெள்ளை வீசியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தேரின் வடங்களை இழுத்து சென்றனர்.
தேரோடும் வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரளாக காணப்பட்டனர்.தொடர்ந்து காலை 8.55 மணிக்கு திருத்தேர் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிலையை அடைந்தது.தொடர்ந்து சுவாமிக்கு நூபுரகங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனைகளும் நடந்தது. அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இறுதி வரை தேரை இழுத்தனர். வருகிற 11ஆம் தேதி ஆடி அமாவாசையன்று கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.